என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஈரோடு கிழக்கு தொகுதியில் இதுவரை ஆவணங்கள் இன்றி கொண்டு வரப்பட்ட ரூ.51.31 லட்சம் பறிமுதல்- பறக்கும் படையினர் நடவடிக்கை
- கடந்த சில நாட்களாக துணை ராணுவத்தினரும், போலீசாருடன் இணைந்து தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
- ரூ.10 ஆயிரத்துக்கு மேல் கொண்டு செல்லப்படும் பரிசுப்பொருட்கள், மதுபானங்களையும் பறிமுதல் செய்து வருகின்றனர்.
ஈரோடு:
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வரும் 27-ந் தேதி நடைபெறுகிறது. இதற்கான அறிவிப்பு வெளியான அடுத்த நிமிடமே தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துவிட்டன.
தேர்தலில் பொதுமக்களுக்கு பணம், பரிசுப்பொருட்கள் கொடுப்பதை தடுக்கும் வகையில் 4 நிலை கண்காணிப்பு குழு, 3 பறக்கும் படை அமைக்கப்பட்டு அவர்கள் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் ஈரோடு கிழக்கு தொகுதி முழுவதும் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இது தவிர கடந்த சில நாட்களாக துணை ராணுவத்தினரும், போலீசாருடன் இணைந்து தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
ரூ.50 ஆயிரத்திற்கு மேல் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்படும் பணம் பறிமுதல் செய்து வருகின்றனர். மேலும் ரூ.10 ஆயிரத்துக்கு மேல் கொண்டு செல்லப்படும் பரிசுப்பொருட்கள், மதுபானங்களையும் பறிமுதல் செய்து வருகின்றனர்.
அதன்படி கடந்த மாதம் 20-ந் தேதி முதல் நேற்று வரை உரிய ஆவணங்கள் இன்றி கொண்டுவரப்பட்ட ரூ.51 லட்சத்து 31 ஆயிரத்து 590 பறிமுதல் செய்யப்பட்டு ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள தேர்தல் கட்டுப்பாட்டு அறையில் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இதேப்போல் இதுவரை ரூ.7.36 லட்சம் மதிப்பில் மதுபானங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் ரூ.1.33 மதிப்பில் புகையிலை பொருட்கள் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.






