search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஓமலூர் அருகே குடிநீர் தொட்டி மீது ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த முதியவர்
    X
    குடிநீர் தொட்டி மீது ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த முதியவரையும், அவரை தீயணைப்பு வீரர்கள் மீட்பதையும் காணலாம்.

    ஓமலூர் அருகே குடிநீர் தொட்டி மீது ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த முதியவர்

    • மனைவி கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார்.
    • ஓமலூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட செல்லபிள்ளைகுட்டை ஊராட்சியில் கவாண்டபட்டி கிராமம் உள்ளது.

    ஓமலூர்:

    சேலம் மாவட்டம் ஓமலூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட செல்லபிள்ளைகுட்டை ஊராட்சியில் கவாண்டபட்டி கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் சுமார் 50 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த ஊரை சேர்ந்தவர் சித்தேஸ்வரன்(வயது60).

    இவரது மனைவி கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இந்தநிலையில், இவரது மகள்கள் கலாவதி, சங்கீதா ஆகிய இருவரும் இவரை பராமரித்து வந்துள்ளனர். இவர் தினமும் மது குடித்து விட்டு வந்து, சத்தம் போட்டுகொண்டு இருப்பார் என்று கூறப்படுகிறது.

    இந்தநிலையில், நேற்று சித்தேஸ்வரன் மது குடித்துவிட்டு மீண்டும் மது குடிப்பதற்காக மகளிடம் பணம் கேட்டதாக தெரிகிறது. மகள் தன்னிடம் பணம் இல்லை என்று கூறியுள்ளார். இதனால் போதையில் அவர் வீட்டின் அருகில் இருந்த மேல்நிலை நீர்தேக்கத்தொட்டி மீது ஏறினார்.

    அங்கிருந்து கீழே குதித்து தற்கொலை செய்யப்போவதாக அவர் மிரட்டல் விடுத்துள்ளார். சித்தேஸ்வரன் போதையில் இருந்ததால், அவரை மேலே ஏறி அப்பகுதி மக்களால் மீட்க முடியவில்லை. இதையடுத்து ஓமலூர் தீயணைப்பு நிலையத்திற்கும், ஓமலூர் போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

    விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், கயிறுகொண்டு மேலே ஏறினர். பின்னர், போதையில் இருந்த அவரை, கயிறு மூலம் கட்டி ஏணி மூலம் மெதுவாக கீழே இறங்க வைத்தனர். இதையடுத்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தியபோது, தனது மகள் தன்னை கண்டு கொள்ளவில்லை. அதனால், தண்ணீர் தொட்டி மீது ஏறியதாக கூறினார்.

    இரண்டு மகள்களும், இவரை நன்றாக கவனித்து வருகின்றனர். ஆனால், இவர் தான், தினமும் மது குடித்து விட்டு வந்து, அவர்களிடம் தொல்லை செய்கிறார் என்று கூறினர். இதையடுத்து சித்தேஸ்வரனின் மகள்களுக்கு போலீசார் உரிய ஆலோசனைகளை வழங்கி, கீழே இறங்கிய சித்தேஸ்வரனை வீட்டில் பாதுகாப்பாக விட்டுவிட்டு வந்தனர்.

    இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    Next Story
    ×