என் மலர்
உள்ளூர் செய்திகள்

வத்திராயிருப்பு அருகே பட்டாசு தொழிலாளி அடித்துக்கொலை
- பட்டாசு தொழிலாளியை கொலை செய்த மகேஷ், சிவாவை போலீசார் தேடி வருகின்றனர்.
- போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருதுநகர்:
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே உள்ள ராமசாமியாபுரம் மேலத்தெருவை சேர்ந்தவர் சுந்தரராஜ் (வயது42). இவர் பாட்டங்குளத்தில் உள்ள பட்டாசு ஆலையில் வேலை பார்த்து வந்தார். சம்பவத்தன்று வேலைக்கு சென்ற அவர் மாலையில் சம்பள பணத்தை வாங்கி கொண்டு வீட்டிற்கு வந்தார்.
அப்போது பக்கத்து வீட்டை சேர்ந்த ஊரணியான் மகன்கள் மகேஷ், சிவா ஆகியோர் நின்றிருந்தனர். அவர்களிடம் தனது சம்பள பணத்தை எண்ணி தருமாறு சுந்தர்ராஜ் கூறியுள்ளார். அப்போது சகோதரர்கள் 2 பேரும் அதற்கு மறுப்பு தெரிவித்து வாக்குவாதம் செய்தனர். இதில் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது.
ஆத்திரமடைந்த மகேஷ், சிவா ஆகிய 2 பேர் சுந்தர் ராஜை குண்டுகட்டாக தூக்கி சுவரில் மோதச் செய்தனர். இதில் அவரது கழுத்து, கால்களில் படுகாயம் ஏற்பட்டது. வலியால் துடித்த சுந்தர்ராஜ் மயங்கி விழுந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து அவரது மனைவி சிட்டு கூமாப்பட்டி போலீசில் புகார் செய்தார். போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
பட்டாசு தொழிலாளியை கொலை செய்த மகேஷ், சிவாவை போலீசார் தேடி வருகின்றனர்.






