search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    உடல் நலக்குறைவால் மனவேதனை: மன்னார்குடி அருகே விஷம் குடித்து வயதான தம்பதி தற்கொலை
    X

    உடல் நலக்குறைவால் மனவேதனை: மன்னார்குடி அருகே விஷம் குடித்து வயதான தம்பதி தற்கொலை

    • கடந்த ஓரிரு நாட்களுக்கு முன்னர் சோமசுந்தரத்துக்கு வாய் பகுதியில் சிறிய கட்டி ஏற்பட்டது.
    • தஞ்சாவூரில் உள்ள ஆஸ்பத்திரியில் சோமசுந்தரம் சிகிச்சைக்காக சென்றார்.

    மன்னார்குடி:

    தஞ்சாவூர் அஞ்சுகம் நகரை சேர்ந்தவர் சோமசுந்தரம் (வயது 78). இவரது மனைவி தாயம்மாள் (77). இவர்களது மகன் மதுரையில் வசித்து வருகிறார். சோமசுந்தரம் தஞ்சாவூர் வீட்டில் தனியாக வசித்து வந்தார். இந்த நிலையில் தம்பதி இருவருக்கும் சமீப நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்தது.

    இந்நிலையில் கடந்த ஓரிரு நாட்களுக்கு முன்னர் சோமசுந்தரத்துக்கு வாய் பகுதியில் சிறிய கட்டி ஏற்பட்டது. இதற்காக தஞ்சாவூரில் உள்ள ஆஸ்பத்திரியில் சோமசுந்தரம் சிகிச்சைக்காக சென்றார். அங்கு அவருக்கு வாய்ப்பகுதியில் இருந்த கட்டியை அகற்றிய டாக்டர்கள் அதனை புற்றுநோய் தொடர்பான பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர் .

    இதனால் மனம் உடைந்த சோமசுந்தரம், தனது மனைவி தாயம்மாளை அழைத்துக் கொண்டு, வாடகை காரில் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள ஈசனகுடி கிராமத்தில் வசிக்கும் உறவினர் வீட்டுக்கு சென்றனர்.

    வரும் வழியில் பெட்டிக்கடை ஒன்றில் நிறுத்தி குளிர்பானம் வாங்கி அதில் விஷத்தை கலந்து இருவரும் குடித்துள்ளனர். பின்னர் அந்த காரில் ஈசனகுடி உறவினர் வீட்டுக்கு வந்த சோமசுந்தரம், வாடகை காரை திருப்பி அனுப்பினார்.

    பின்னர் உறவினர்களிடம் தானும், தனது மனைவியும் விஷம் குடித்திருக்கும் விபரத்தை தெரிவித்துள்ளார்.

    இதைத் தொடர்ந்து உறவினர்கள் அவர்களை சிகிச்சைக்காக மன்னார்குடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் சோமசுந்தரத்தை மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இந்நிலையில் சோமசுந்தரமும், தாயம்மாளும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இது குறித்து விக்கிரபாண்டியம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×