என் மலர்
உள்ளூர் செய்திகள்

செம்பரம்பாக்கம் ஏரி நீர்மட்டம் 20 அடிக்கு கீழே குறைந்தது
- செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்த நீர்மட்டம் 24 அடியில் தற்போது 19.61 அடி தண்ணீர் உள்ளது.
- மழை பொழிவு இல்லாததால் ஏரிக்கு நீர்வரத்து 163 கன அடியாக குறைந்துள்ளது.
பூந்தமல்லி:
சென்னை, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் பரவலாக இம்மாத தொடக்கத்தில் கனமழை பெய்ததால் ஏரிகளின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர தொடங்கியது.
இதில் சென்னைக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கும் ஏரிகளில் ஒன்றான செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்தானது அதிகரிக்க தொடங்கிய நிலையில் முதற்கட்டமாக கடந்த 2-ம் தேதி 100 கனஅடி உபரி திறக்கப்பட்டு படிப்படியாக 1000 கனஅடி வரை உயர்த்தப்பட்டது.
செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்த நீர்மட்டம் 24 அடியில் தற்போது 19.61 அடி தண்ணீர் உள்ளது. மொத்த கொள்ளளவான 3465 மில்லியன் கனஅடியில் தற்போது 2508 மில்லியன் கனஅடி தண்ணீர் உள்ளது.
மழை பொழிவு இல்லாததால் ஏரிக்கு நீர்வரத்து 163 கன அடியாக குறைந்துள்ளது. இதனால் உபரி நீரின் வெளியேற்றம் 800 கன அடியிலிருந்து தற்போது 100 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் வரும் நாட்களில் மழை பொழிவு இருந்து நீர்வரத்து அதிகரிக்கும் பட்சத்தில் வெளியேற்ற கூடிய உபரி நீரின் அளவு அதிகரிக்கபடும் எனவும் தொடர்ந்து ஏரியை கண்காணித்து வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இம்மாதம் 2-ம் தேதியிலிருந்து தொடர்ந்து 20 தினங்களாக உபரி நீர் வெளியேப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.






