என் மலர்
உள்ளூர் செய்திகள்

சத்தியமங்கலம் காரப்பள்ளம் சோதனை சாவடியில் நுழைவு கட்டணம் கையாடல் செய்த தற்காலிக ஊழியர் பணி நீக்கம்
- வங்கி கணக்கை சரிபார்த்த போது இந்த முறைகேடு நடந்ததை கண்டுபிடித்துள்ளனர்.
- ஆசனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் வனப்பகுதி வழியாக அமைந்துள்ள சத்தியமங்கலம்-மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்களில் பயணிக்க வனத்துறை சார்பில் நுழைவு கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
தமிழகத்தில் இருந்து கர்நாடக மாநிலம் செல்லும் வாகனங்களுக்கு பண்ணாரி வன சோதனை சாவடியிலும், கர்நாடக மாநிலத்தில் இருந்து தமிழகம் நோக்கி வரும் வாகனங்களுக்கு ஆசனூர் அருகே காரப்பள்ளம் வன சோதனை சாவடியிலும் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இந்த வாகனங்களுக்கு முறையே கட்டணமாக ரூ.20 முதல் ரூ. 50 என வசூலிக்கப்பட்டு புலிகள் காப்பக அறக்கட்டளை வங்கி கணக்கில் செலுத்தப்பட்டு வருகிறது.
இந்த 2 சோதனைச்சாவடிகளும் முக்கிய போக்குவரத்து பகுதியாக விளங்கி வருகிறது. இங்கு நாளொன்றுக்கு 750 முதல் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகின்றன. இதில் ஆசனூர் வனச்சரக அலுவலகத்தில் தற்காலிக பணியாளராக பணிபுரியும் ஓங்கல் வாடி கிராமத்தை சேர்ந்த கம்ப்யூட்டர் ஆபரேட்டர் ஜனாமூர்த்தி (28) காரப்பள்ளம் வன சோதனை சாவடியில் வரும் வாகனங்களுக்கு கட்டணம் வசூல் செய்து வந்தார்.
இந்நிலையில் காரப்பள்ளம் வன சோதனை சாவடியில் வசூலிக்கப்பட்ட வாகனங்களின் நுழைவு கட்டணம் சரிவர சம்பந்தப்பட்ட வங்கிக்கு செலுத்தப்படாமல் முறைகேடு நடந்துள்ளதாக ஆசனூர் வனத்துறை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். அவர்கள் வங்கி கணக்கை சரிபார்த்த போது இந்த முறைகேடு நடந்ததை கண்டுபிடித்துள்ளனர்.
இது குறித்து வனத்துறையினர் விசாரித்த போது கம்ப்யூட்டர் ஆபரேட்டர் ஜனாமூர்த்தி வன சோதனை சாவடியில் தினமும் வசூல் ஆகும் வாகன நுழைவு கட்டணம் வசூல் பணத்தை அங்குள்ள பேங்க் ஆப் இந்தியா வங்கியில் செலுத்தி வந்துள்ளார். இதில் சில நாட்கள் வங்கியில் பணத்தை செலுத்தாமல் போலியாக வங்கி சலானை பணம் செலுத்தியது போல் சீல் வைத்து அலுவலக கோப்புகளில் பணம் செலுத்தியது போல் எழுதி வைத்திருந்ததும் தெரியவந்தது.
இவ்வாறாக அவர் ரூ.8 லட்சத்து 20 ஆயிரம் பணம் கையாடல் செய்தது தெரியவந்தது. இது தவிர வனப்பகுதியில் வாகனங்கள் நிறுத்துவதற்கான கட்டணம், வன விதிமுறைகளை மீறும் வாகன ஓட்டிகளிடம் அபராதமாக விதிக்கப்படும் கட்டணங்களையும் கையாடல் செய்ததாக கூறப்படுகிறது.
இதனையடுத்து முறைகேட்டில் ஈடுபட்ட தற்காலிக பணியாளர் ஜனாமூர்த்தி பணி நீக்கம் செய்யப்பட்டார். மேலும் அவர் மீது வனத்துறையினர் ஆசனூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இதன் அடிப்படையில் ஆசனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.