என் மலர்
உள்ளூர் செய்திகள்

திண்டுக்கல் அருகே பிரபல எழுத்தாளரின் மகனை அரிவாளால் வெட்டிய கும்பல்
- ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்த தமிழிசை அரசு ஆஸ்பத்திரியில் முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் தனியார் ஆஸபத்திரியில் சேர்க்கப்பட்டார்.
- சின்னாளப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய 7 பேர் கொண்ட கும்பலை தேடி வருகின்றனர்.
சின்னாளப்பட்டி:
திண்டுக்கல் மாவட்டம் சின்னாளப்பட்டியைச் சேர்ந்தவர் கோகிலா தங்கசாமி (வயது 70). பிரபல எழுத்தாளர் மற்றும் கல்வியாளராக உள்ளார். மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் தமிழ்துறை இயக்குனராகவும் காந்திகிராம கிராமிய பல்கலைக்கழகத்தில் கல்வியியல் துறை துணைவேந்தராகவும் பணியாற்றி கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு ஓய்வு பெற்றவர். தேனி மாவட்டம் கோகிலாபுரத்தை சொந்த ஊராக கொண்ட இவர் அந்த ஊரின் பெயரை தங்கசாமி என்ற பெயருடன் சேர்த்து கோகிலா தங்கசாமி என்று அழைக்கப்பட்டார்.
இவரது மகன் தமிழிசை (35). இவர் காதல் திருமணம் செய்து சின்னாளப்பட்டியில் தனது தந்தையுடன் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் புது வீடு கட்டி வருகிறார். அந்த வீட்டு முன்பு இவர் நின்று கொண்டு இருந்தபோது 7 பேர் கொண்ட கும்பல் அங்கு வந்து கண் இமைக்கும் நேரத்தில் அவரை சரமாரியாக அரிவாளால் வெட்டினர். அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து அவர்களை பிடிக்க முயன்ற போது தப்பி ஓடினர். ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்த தமிழிசை திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் தனியார் ஆஸபத்திரியில் சேர்க்கப்பட்டார்.
இது குறித்து சின்னாளப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய 7 பேர் கொண்ட கும்பலை தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.






