search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோவில்பட்டியில் நகராட்சி சந்தை கடைகளை இடித்து அகற்றும் பணி தொடங்கியது- எதிர்ப்பு தெரிவித்த வியாபாரிகள் கைது
    X

    கோவில்பட்டியில் நகராட்சி சந்தை கடைகளை இடித்து அகற்றும் பணி தொடங்கியது- எதிர்ப்பு தெரிவித்த வியாபாரிகள் கைது

    • கோவில்பட்டி டி.எஸ்.பி.வெங்கடேஷ் தலைமையிலான போலீசார் வியாபாரிகளை கைது செய்தனர்.
    • 10-க்கும் மேற்பட்ட போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் மற்றும் 200-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    கோவில்பட்டி:

    தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நகராட்சிக்கு சொந்தமான பசும்பொன் முத்துராமலிங்கதேவர் தினசரி சந்தையில் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் பழைய கடை கட்டிடங்களை இடித்து விட்டு ரூ. 6 கோடியே 87 லட்சம் மதிப்பீட்டில் புதியதாக கடைகள் கட்டுவதற்கு நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

    புதிய சந்தை கட்டுமான பணி நிறைவடையும் வரை தற்காலிக சந்தையானது ஏற்கனவே பல ஆண்டுகளாக செயல்படாமல் உள்ள கோவில்பட்டி புதிய பஸ் நிலையத்தில் செயல்படும் எனவும், வியாபாரிகளுக்கும், பொதுமக்களுக்கும் தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் அங்கு நிறைவேற்றி தரப்படும் எனவும் நகராட்சி நிர்வாகம் அறிவித்தது. ஆனால் வியாபாரிகள் புதிய பஸ் நிலைய மார்க்கெட்டுக்கு செல்ல மறுத்தும், முறையாக கடைகளை ஒதுக்கீடு செய்து தர வலியுறுத்தியும், புதிய கடை கட்டுமானங்கள் குறித்த வரைபடங்களை பொதுமக்கள் பார்வைக்கு முன் வைக்கவும், தினசரி சந்தை இடமாற்றம் மற்றும் புதிய கட்டுமானம் குறித்து அனைத்து கட்சிகள் வியாபாரிகள் சங்கங்கள் மற்றும் பொதுமக்களிடம் கருத்து கேட்பு கூட்டம் நடத்த வேண்டும் உள்ளிட்ட 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தியும், நகராட்சி நிர்வாகத்தின் நிர்வாக குளறுபடிகளை கண்டித்தும், கடையடைப்பு உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களை தொடர்ந்து நடத்தி வந்தனர்.

    இந்நிலையில் நகராட்சி நிர்வாகமும், மார்க்கெட் வியாபாரிகளும் நீதிமன்றத்திற்கு சென்றனர். சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மார்ச் 31-ந் தேதி வழங்கப்பட்ட உத்தரவின்படி, கோவில்பட்டியில் இன்று காலை 7 மணியளவில் நகராட்சி சந்தை கடைகளை இடித்து அப்புறப்படுத்தும் பணி கோவில்பட்டி தாசில்தார் சுசீலா, நகராட்சி கமிஷனர் ராஜாராம் ஆகியோர் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் தொடங்கியது.

    இப்பணிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்த மார்க்கெட் வியாபாரிகளில் ஒரு தரப்பினர் மறியலில் ஈடுபட முயன்றனர். கோவில்பட்டி டி.எஸ்.பி.வெங்கடேஷ் தலைமையிலான போலீசார் வியாபாரிகளை கைது செய்தனர்.

    இதையடுத்து தினசரி சந்தை கடைகளை இடிக்கும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. 10-க்கும் மேற்பட்ட போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் மற்றும் 200-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    Next Story
    ×