என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஆன்லைன் நிறுவனத்தின் பெயரில் கூப்பன் அனுப்பி கார் பரிசு விழுந்ததாக கூறி வாலிபரிடம் ரூ.14 லட்சம் மோசடி
- ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அடுத்த கடத்தூர் பகுதியை சேர்ந்தவர் அஜித்குமார்.
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அடுத்த கடத்தூர் பகுதியை சேர்ந்தவர் அஜித்குமார் (25). கடந்த சில மாதங்களுக்கு முன்பு இவரது வீட்டு முகவரிக்கு ஒரு ஆன்லைன் நிறுவனத்தின் பெயரில் தபால் ஒன்று வந்தது. அதில் ஒரு பரிசு கூப்பனும், ஒரு கடிதமும் இருந்தது.
அஜித்குமார் அந்த கூப்பனை திறந்து பார்த்தபோது சொகுசு கார் பரிசு விழுந்துள்ளதாக குறிப்பிடப்பட்டிருந்தது. இதையடுத்து அந்த கடிதத்தை அவர் திறந்து படித்ததார். அதில் உங்களுக்கு கார் பரிசாக விழுந்துள்ளது எனவும், மேலும் இது பற்றிய விவரம் அறிய கடிதத்தில் கொடுக்கப்பட்டுள்ள செல்போன் எண்ணை தொடர்பு கொள்ளவும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதை உண்மை என்று நம்பிய அஜித்குமார் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள செல்போன் எண்ணை தொடர்பு கொண்டார். அதில் பேசிய நபர் பரிசு கூப்பனை போட்டோ எடுத்து ஒரு செல்போன் எண்ணை குறிப்பிட்டு வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்ப சொன்னார். இதையடுத்து அஜித்குமார் பரிசு கூப்பனை போட்டோ எடுத்து அந்த வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பினார்.
பின்னர் அஜித் குமாரை தொடர்பு கொண்ட அந்த நபர் உங்களுக்கு தான் கார் பரிசு விழுந்துள்ளதாகவும், நீங்கள் கார் அல்லது அதற்கு உண்டான தொகையான ரூ.14 லட்சத்து 80 ஆயிரத்தை பெற்று கொள்ளலாம் என ஆசைவார்த்தை கூறி நம்ப வைத்துள்ளார். அஜித்குமாரும் இதை உண்மை என்று நம்பியுள்ளார்.
பின்னர் அந்த நபர் அஜித் குமாரிடம் காருக்கான பதிவு கட்டணம், வரி, புதிய கணக்கு தொடங்குவதற்கான கட்டணம், ஜி.எஸ்டி., கமிஷன் என பல்வேறு காரணங்களை சொல்லி கொஞ்சம் கொஞ்சமாக அஜித்குமாரிடம் பல தவணை முறையில் ரூ.14 லட்சத்தை பெற்றுள்ளார்.
அதன் பின்னர் அந்த நபர் செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. இதனால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அஜித்குமார் இது குறித்து ஈரோடு சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார்.
அதன் பேரில் சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மோசடி கும்பலின் வங்கி கணக்குகளை முடக்கும் நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த துணிகர மோசடி சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சைபர் கிரைம் போலீசார் பல்வேறு வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வந்தாலும் அவ்வப்போது இது போன்ற மோசடி சம்பவங்கள் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.






