search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் ஒப்பந்த ஊழியர்கள் 3-வது நாளாக போராட்டம்
    X
    ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் பணியாற்றும் ஒப்பந்த ஊழியர்கள் இன்று 3-வது நாளாக பணியை புறக்கணித்து போராட்டம் நடத்தினர்.

    ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் ஒப்பந்த ஊழியர்கள் 3-வது நாளாக போராட்டம்

    • அரசு அறிவித்த ஊதியத்தை முழுமையமாக வழங்க வேண்டும் என வலியுறுத்தி கடந்த சில வாரங்களுக்கு முன் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    • ஒப்பந்த ஊழியர்களுக்கு ஓய்வு அறை, வார விடுமுறை வழங்க வேண்டும் உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    ஈரோடு:

    ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் தனியார் நிறுவனம் சார்பில் 132 பேர் ஒப்பந்தத் தொழிலாளர்களாகப் பணியாற்றி வருகின்றனர்.

    இவர்கள், தூய்மை, காவல், நோயாளிகளை அழைத்து செல்லுதல் போன்ற பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

    இவர்களுக்கு அரசு அறிவித்த ஊதியம் ஒரு நபருக்கு நாள் ஒன்றுக்கு ரூ.707 வீதம் மாதத்துக்கு ரூ.21 ஆயிரம் வழங்க வேண்டும். ஆனால் ஒப்பந்த நிறுவனமோ நாள் ஒன்றுக்கு ரூ.280 வீதம் மாதத்துக்கு ரூ.8 ஆயிரத்து 400 மட்டுமே வழங்கி வருகிறது.

    எனவே அரசு அறிவித்த ஊதியத்தை முழுமையமாக வழங்க வேண்டும் என வலியுறுத்தி கடந்த சில வாரங்களுக்கு முன் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதேபோல் ஒப்பந்த ஊழியர்களுக்கு ஓய்வு அறை, வார விடுமுறை வழங்க வேண்டும் உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது கோரிக்கை குறித்து நடவடிக்கை எடுப்பதாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதையடுத்து போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது.

    இந்த நிலையில் கடந்த 3-ந்தேதி தொழிலாளர் நலத்துறை அலுவலர் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. ஆனால் அதில் உடன்பாடு ஏற்படவில்லை.

    இந்த நிலையில், அறிவித்தபடி ஊதியத்தை முழுமையாக வழங்க கோரி ஒப்பந்த ஊழியர்கள் பணியை புறக்கணித்து அரசு மருத்துவமனை வளாகத்தில் நேற்று முன்தினம் இரவு முதல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இரவில் விடிய விடிய பனியை பொருத்தாமல் போராட்டம் தொடர்ந்து நடந்தது.

    இன்று 3-வது நாளாக ஒப்பந்த ஊழியர்கள் தொடர்ந்து பணியை புறக்கணித்து ஈரோடு அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஒப்பந்த ஊழியர்கள் பணி புறக்கணிப்பு போராட்டத்தால் அரசு மருத்துவமனை வளாகத்தில் தூய்மை பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

    தொடர்ந்து 3-வது நாளாக ஒப்பந்த ஊழியர்கள் பணியை புறக்கணித்து அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இது குறித்து போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பணியாளர்கள் கூறும்போது,

    எங்களை பணியில் அமர்த்திய நிறுவனம் ஒப்பந்தத்தை மீறி செயல்பட்டு வருகிறது. ஏற்கனவே எங்கள் கோரிக்கைகள் வலியுறுத்தி பல கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்று முடிந்து விட்டது. ஆனால் நிறுவனம் தொடர்ந்து ஒப்பந்தத்தை மீறி செயல்பட்டு வருகிறது.

    எங்கள் கோரிக்கைகள் நிறைவேறும் வரை நாங்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபடுவோம். அப்படியும் எங்கள் கோரிக்கை நிறைவேறவில்லை என்றால் அடுத்த கட்டமாக சட்ட போராட்டம் நடத்த முடிவு செய்து சென்னை உயர் நீதிமன்றத்தை அணுக உள்ளோம் என்றனர்.

    Next Story
    ×