search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கால்நடைகள் சாலைகளில் திரிந்தால் உரிமையாளர்களுக்கு ரூ.2 ஆயிரம் அபராதம்
    X

    கால்நடைகள் சாலைகளில் திரிந்தால் உரிமையாளர்களுக்கு ரூ.2 ஆயிரம் அபராதம்

    • 24 மணி நேரத்திற்கு பின்பும் உரிமை கோரப்படாத கால்நடைகள், உள்ளாட்சி அமைப்புகள் அளவில் அமைக்கப்பட்டு உள்ள குழுக்கள் மூலம் பொது ஏலம் விடப்படும்.
    • கால்நடை உரிமையாளர்கள் தங்கள் கால்நடைகளை அவர்களின் சொந்த இடங்களிலேயே கட்டி வைத்து பராமரிக்கவும், பொதுவெளியில் விடாமல் முறையாக பராமரித்துக் கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தப்படுகிறது.

    திருவள்ளூர்:

    திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் ஆல்பிஜான் வர்கீஸ் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    திருவள்ளூர் மாவட்டத்தில் சாலைகளில் பொது மக்களுக்கும் போக்குவரத்திற்கும் இடையூறு ஏற்படுகின்ற வகையில் விடப்படுகின்ற கால்நடைகளை பிடித்து மாவட்ட அளவிலும், ஊராட்சி ஒன்றிய அளவிலும் ஊராட்சியில் அமைக்கப்பட்டுள்ள பட்டியில் அடைக்கப்படுவதுடன், கால்நடைகளின் உரிமையாளர்களுக்கு ரூ.2 ஆயிரம் அபராத தொகையாக விதிக்கப்படும் நடைமுறை நாளை (ஞாயிற்றுக்கிழமை) முதல் அமல்படுத்தப்பட உள்ளது.

    திருவள்ளூர் மாவட்டத்தில் அனைத்து ஊராட்சி ஒன்றியங்களுக்கு உள்பட்ட கிராம ஊராட்சி அளவில் அமைக்கப்பட்டுள்ள குழுக்கள் மூலம் காவல்துறையுடன் இணைந்து பொது மக்களுக்கு இடையூறாக சாலைகளில் சுற்றித் திரியும் கால்நடைகள் பிடிக்கப்படும்.

    இந்த கால்நடைகளை 24 மணி நேரத்திற்குள் ரூ.2 ஆயிரம் அபராத தொகையை செலுத்தி, உள்ளாட்சி அமைப்புகள் அளவில் அமைக்கப்பட்டு உள்ள குழுவிடம், கால்நடை வளர்ப்பவர்கள் போலீஸ் இன்ஸ்பெக்டரின் பரிந்துரை கையொப்பத்தை பெற்று, பிரமாண பத்திரம் சமர்ப்பித்த பின்னரே கால்நடைகளை கால்நடை உரிமையாளர்கள் கொண்டு செல்லலாம்.

    24 மணி நேரத்திற்கு பின்பும் உரிமை கோரப்படாத கால்நடைகள், உள்ளாட்சி அமைப்புகள் அளவில் அமைக்கப்பட்டு உள்ள குழுக்கள் மூலம் பொது ஏலம் விடப்படும். எனவே கால்நடை உரிமையாளர்கள் தங்கள் கால்நடைகளை அவர்களின் சொந்த இடங்களிலேயே கட்டி வைத்து பராமரிக்கவும், பொதுவெளியில் விடாமல் முறையாக பராமரித்துக் கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தப்படுகிறது.

    கால்நடைகளை தொடர்ந்து பொதுவெளியில் விடும்பட்சத்தில் பிராணிகள் வதை தடுப்பு சட்டத்தின்படி அபராதம் விதிக்கப்பட்டு, போலீசில் புகார் பதிவு செய்யப்பட்டு மாடுகளின் உரிமையாளர்கள் மீது உரிய கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×