நாகர்கோவிலில் நடந்த திருமண விழாவில் மோதல்: அண்ணன்-தம்பி கைது

வடசேரி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.முருகன், மகேஷ் ஆகியோரை தேடி வருகின்றனர்.
நாகர்கோவிலில் நடந்த திருமண விழாவில் மோதல்: அண்ணன்-தம்பி கைது
Published on

நாகர்கோவில்:

தென்காசி மாவட்டம் சுரண்டை அருகே உள்ள ஆனைகுளம் கிராமத்தைச் சேர்ந்தவர் கணேசன் (வயது 52).

இவர் தனது குடும்பத்தினருடன் நாகர்கோவிலில் நடைபெற்ற ஒரு திருமண விழாவிற்கு வந்திருந்தார். அப்போது அங்கு ஆணை பொத்தை புத்தேரியை சேர்ந்த முருகன் (45) என்பவருடன் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. சிறிது நேரத்தில் வாக்குவாதம் முற்றி கை கலப்பு ஏற்பட்டது.

இதில் கணேசன் மற்றும் அவரது குடும்பத்தினர் லட்சுமி, செந்தூர் பாண்டி, ஆனந்த், வளர்மதி, விஜயன், சூரியா, மணிகண்டன், சத்யா, மற்றொரு மணிகண்டன் ஆகியோர் காயம் அடைந்ததாக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்ந்து உள்ளனர்.

இது குறித்து வடசேரி போலீசில் கணேசன் புகார் செய்தார். அதில், முருகன், அவரது மகன்கள் சிவா(24), கார்த்திக் (22) மற்றும் செல்வம் (26), மகேஷ் (35) மற்றும் சிலர் சேர்ந்து கம்பு, கத்தி, அரிவாள் ஆகியவற்றால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக குறிப்பிட்டு உள்ளார்.

மேலும் தங்கள் குடும்பத்தினரின் 6 செல்போன்கள் மற்றும் சகோதரியின் தாலி சங்கிலி சம்பவத்தின் போது மாயமாகி விட்டதாகவும் கணேசன் புகாரில் தெரிவித்து உள்ளார். அதன் அடிப்படையில் வடசேரி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

தொடர்ந்து சிவா, அவரது சகோதரர் கார்த்திக் மற்றும் செல்வம் கைது செய்யப்பட்டனர். முருகன், மகேஷ் ஆகியோரை தேடி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com