என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஈரோடு கிழக்கு தொகுதியில் பதற்றமான 32 வாக்குசாவடிகளில் மத்திய பாதுகாப்பு படை போலீசார் பாதுகாப்பு
- 238 வாக்குசாவடிகளில் 32 வாக்குசாவடிகள் பதற்றமானவை என கண்டறிப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
- மத்திய அரசு ஊழியர்கள் தேர்தல் நுண்பார்வையாளராக நியமிக்கப்படுவார்கள்.
ஈரோடு:
ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தல் அடுத்த மாதம் 27-ந் தேதி நடைபெற உள்ளது. இதையடுத்து தேர்தல் ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றது. மொத்தம் 2 லட்சத்து 26 ஆயிரம் வாக்காளர்கள் கொண்ட இத்தொகுதியில் 52 அமைவிடங்களில் 238 வாக்குசாவடிகள் அமைக்கப்பட உள்ளது.
இதற்காக 500 வாக்குபதிவு எந்திரங்கள் மற்றும் யாருக்கு வாக்களித்தோம் என்பதை வாக்காளர்கள் தெரிந்து கொள்ளும் வசதி கொண்ட விவிபேடு எந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளதாக தேர்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 238 வாக்குசாவடிகளில் 32 வாக்குசாவடிகள் பதற்றமானவை என கண்டறிப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வாக்குசாவடி அமைந்துள்ள இடம், கடந்த காலத்தில் வாக்குபதிவின் போது எழுந்த புகார், வாக்காளர்கள் எண்ணிக்கை உள்ளிட்டவை களை கருத்தில் கொண்டு பதற்றமான வாக்கு சாவடிகள் கண்டறிப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறினர். இதில் பெரும்பாலான வாக்குசாவடிகள் அதாவது 15 வாக்குசாவடிகள் கருங்கல்பாளையம் போலீஸ் நிலையம் எல்லைக்குட்பட்ட பகுதியில் அமைந்துள்ளது.
இரண்டாவது இடத்தில் ஈரோடு டவுன் போலீஸ் நிலையம் எல்லைக்குட்பட்ட 13 இடங்களும், மற்றவை ஈரோடு வீரப்பன் சத்திரம் மற்றும் ஈரோடு சூரம்பட்டி போலீஸ் நிலையம் எல்லைக்குட்பட்ட பகுதிகளிலும் அமைந்துள்ளதாக அதிகாரிகள் கூறினர். பதற்றமான வாக்குசாவடிகளில் மத்திய பாதுகாப்பு படை போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள் என்றும், வாக்கு சாவடியில் கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்தப்பட்டு நடவடிக்கைகள் பதிவு செய்யப்படும். மேலும் மத்திய அரசு ஊழியர்கள் தேர்தல் நுண்பார்வையாளராக நியமிக்கப்படுவார்கள்.
இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.






