என் மலர்
உள்ளூர் செய்திகள்

தேர்தல் விதிமுறைகள் மீறல் தி.மு.க.-அ.ம.மு.க.வினர் மீது வழக்கு பதிவு
- ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலையொட்டி தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளன.
- பறக்கும் படைகள், நிலை கண்காணிப்பு குழுக்கள் என தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
ஈரோடு:
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலையொட்டி தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளன.
இதில் கட்சிகளின் கொடிகள், விளம்பர தட்டிகள் வைத்தல், ஒலி பெருக்கிகள் பயன்படுத்துதல், ரூ.50 ஆயிரத்துக்கும் மேல் பணம் எடுத்துச் செல்ல உரிய ஆவணங்கள் மற்றும் வங்கிப் பரிவர்த்தனைகள் என பல்வேறு விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. இவற்றைக் கண்காணிக்க பறக்கும் படைகள், நிலை கண்காணிப்பு குழுக்கள் என தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில் ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள வேட்பாளரை வரவேற்க நேற்று மாலை அக்கட்சியினர் ஈரோடு காவிரி பாலம் சோதனை சாவடி அருகே சுமார் 50 பேர் திரண்டிருந்தனர்.
அப்போது அவர்கள் வேட்பாளரை வரவேற்க தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி டிரம்ஸ் அடித்தும், பட்டாசுகள் வெடித்தும் வரவேற்றுள்ளனர். இதையடுத்து அக்கட்சியின் நிர்வாகிகள் 2 பேர் மீது தேர்தல் நடத்தை விதிமுறைகள் மீறலுக்காக கருங்கல் பாளையம் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.
இதேபோல தி.மு.க. கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளரை ஆதரித்து வரவேற்க ஈரோடு பெரிய அக்ரஹாரம் பகுதியில் அக்கட்சியினர் சுமார் 30 பேர் கூடி தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி டிரம்ஸ் அடித்து, பட்டாசு வெடித்தனர்.
இதையடுத்து அக்கட்சியினர் மீதும் கருங்கல்பாளையம் போலீசார் தேர்தல் நடத்தை விதிமுறை மீறல் குறித்து வழக்கு பதிவு செய்துள்ளனர்.






