என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    காட்பாடியில் வாலிபரை குத்தி கொலை செய்ததை செல்போனில் படம் எடுத்த நண்பர்கள்
    X

    காட்பாடியில் வாலிபரை குத்தி கொலை செய்ததை செல்போனில் படம் எடுத்த நண்பர்கள்

    • வெங்கடேசனை கொலை செய்த அவரது நண்பர்கள் செல்போனில் படம் எடுத்துள்ளனர்.
    • மது, கஞ்சா விற்பனை தொடர்பாக இந்த கொலை நடந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

    வேலூர்:

    வேலூர் மாவட்டம், காட்பாடி செங்குட்டை பாரதியார் தெருவை சேர்ந்தவர் சீனிவாசன். இவருடைய மனைவி பாரதி. இவர்களுக்கு வெங்கடேசன் (வயது 22), மணிகண்டன் என 2 மகன்கள் உள்ளனர். இதில் வெங்கடேசன் பாலிடெக்னிக் படித்து முடித்துள்ளார்.

    கடந்த 9-ந் தேதி மாலை 3.30 மணிக்கு வெங்கடேசன் தன்னுடைய தாயார் பாரதியிடம் வேலை தேடி செல்வதாக கூறிவிட்டு வெளியே சென்றார்.பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. பல்வேறு இடங்களில் அவரை தேடி வந்தனர்.

    இதற்கிடையில் நேற்று முன்தினம் இரவு 9 மணிக்கு வெங்கடேசன் தம்பி மணிகண்டனின் வாட்ஸ் அப்புக்கு ஒரு படம் வந்துள்ளது. அதில் வெங்கடேசன் வெட்டப்பட்டு ரத்தகாயத்துடன் இருப்பது போல் இருந்தது.

    இது குறித்து அவர் வெங்கடேசனின் நண்பர் நிர்மல் என்பவரிடம் கேட்டுள்ளார். அப்போது நிர்மல், வெங்கடேசனை யாரோ கூட்டி சென்று அடித்துப் போட்டு விட்டதாகவும், அதனை நான் கூறினால் என்னை குடும்பத்தோடு கொலை செய்து விடுவதாகவும் மிரட்டியுள்ளனர் என தெரிவித்தார்.

    இந்த சம்பவம் குறித்து காட்பாடி போலீஸ் நிலையத்தில் வெங்கடேசனின் தாயார் பாரதி நேற்று புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து வெங்கடேசனின் நண்பர்கள் 2 பேரை பிடித்து விசாரணை நடத்தினர்.

    இதில் வெங்கடேசனை அவரது நண்பர்கள் கத்தியால் குத்தி கொலை செய்து கசம் பகுதியில் உள்ள ஒரு பாழடைந்த கட்டிடத்தின் சுவரை ஒட்டி பள்ளம் தோண்டி புதைத்தது தெரிய வந்தது.

    காட்பாடி டி.எஸ்.பி. பழனி, இன்ஸ்பெக்டர் தமிழ்ச்செல்வன், சப்-இன்ஸ்பெக்டர் வெங்கட்ராமன் மற்றும் போலீசார் கசம் பகுதிக்கு சென்றனர். அங்கு வெங்கடேசன் கொலை செய்யப்பட்டு உடல் புதைக்கப்பட்டிருந்தது.

    இதுகுறித்து காட்பாடி தாசில்தார் ஜெகதீஸ்வரனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவர் வரவழைக்கப்பட்டார். அவர் முன்னிலையில் பிணம் தோண்டி எடுக்கப்பட்டது.

    பிணத்தை பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.

    வெங்கடேசனை கொலை செய்த அவரது நண்பர்கள் செல்போனில் படம் எடுத்துள்ளனர்.அந்த படத்தை தம்பிக்கு அனுப்பியதால் மாட்டிக் கொண்டது தெரிய வந்துள்ளது.

    மது, கஞ்சா விற்பனை தொடர்பாக இந்த கொலை நடந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

    இந்த கொலையில் வெங்கடேசனின் நண்பர்கள் மேலும் 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர். அனைவரையும் கைது செய்த பிறகு முழுமையான விவரம் தெரிய வரும் என போலீசார் தெரிவித்தனர்.

    Next Story
    ×