என் மலர்
உள்ளூர் செய்திகள்

சிவகிரி வனச்சரக அலுவலகத்தில் வேட்டை தடுப்பு காவலரை தாக்கிய ராணுவ வீரர்
- போலீசார் அங்கு விரைந்து சென்று படுகாயம் அடைந்த பாலசுப்பிரமணியனை மீட்டு சிகிச்சைக்காக சிவகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
- போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிவகிரி:
தென்காசி மாவட்டம் சிவகிரி வனச்சரக அலுவலகத்தில் வேட்டை தடுப்பு காவலராக பணிபுரிந்து வருபவர் பாலசுப்பிரமணியன். இவர் வழக்கம் போல் நேற்று வனச்சரக அலுவலகத்தில் இரவு நேர பணியில் இருந்தார்.
அப்போது சிவகிரி கருங்குளம் வடக்கு தெருவை சேர்ந்த சக்திவேல் என்பவரது மகன் முப்புடாதி குமார் (வயது 24) என்பவர் சிவகிரி வனச்சரக அலுவலகத்தின் உள்ளே புகுந்து பணியில் ஈடுபட்டிருந்த பாலசுப்பிரமணியனை சரமாரியாக தாக்கினார். அருகே இருந்த வேட்டை தடுப்பு காவலர்கள் மணிகண்டன், மாரியப்பன் ஆகியோர் தடுத்து நிறுத்தி, சிவகிரி போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
உடனே போலீசார் அங்கு விரைந்து சென்று படுகாயம் அடைந்த பாலசுப்பிரமணியனை மீட்டு சிகிச்சைக்காக சிவகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து ராணுவ வீரரான முப்புடாதி குமாரிடம் விசாரணை நடத்தினர்.
அதில், கடந்த மாதம் சிவகிரிக்கு மேற்கே மேற்குத்தொடர்ச்சி மலையில் உள்ள வடுவூத்து கன்னிமார் கோவிலுக்கு 12 பேர் வனத்துறை அனுமதியின்றி சென்றதாகவும், அவர்களுக்கு வனத்துறையினர் அபராதம் விதித்ததாகவும் கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து நேற்று முன்தினம் விடுமுறையில் ஊருக்கு வந்த முப்புடாதி குமாரிடம் அபராதம் கட்டியவர்கள் புகார் தெரிவித்ததாகவும், இதனால் ஆத்திரமடைந்த முப்புடாதி குமார் தாக்குதல் நடத்தியதும் தெரியவந்தது. இதுதொடர்பாக தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.






