search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கடலூர் அருகே கூர்நோக்கு இல்லத்தில் இருந்து 6 சிறுவர்கள் தப்பி ஓட்டம்
    X

    கடலூர் அருகே கூர்நோக்கு இல்லத்தில் இருந்து 6 சிறுவர்கள் தப்பி ஓட்டம்

    • கூர்நோக்கு இல்லத்தில் பாதுகாப்பு பணியில் காவலர் இருந்து வந்தார். நேற்று இரவு இல்லத்தில் இருந்த 6 சிறுவர்கள் திடீரென்று மாயமானார்கள்.
    • கடலூர் புதுநகர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

    கடலூர்:

    கடலூர் அடுத்த சாவடி பகுதியில் கூர்நோக்கு இல்லம் உள்ளது. இங்கு பல்வேறு குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்ட 18 வயதுக்குட்பட்ட 13 சிறுவர்கள் இருந்து வருகின்றனர்.

    இந்த நிலையில் கூர்நோக்கு இல்லத்தில் பாதுகாப்பு பணியில் காவலர் இருந்து வந்தார். நேற்று இரவு இல்லத்தில் இருந்த 6 சிறுவர்கள் திடீரென்று மாயமானார்கள். இதனால் அதிர்ச்சி அடைந்த காவலாளி 6 சிறுவர்களை எங்கு தேடியும் கிடைக்கவில்லை. இதனை தொடர்ந்து கடலூர் புதுநகர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் அளித்தார்.

    கடலூர் புதுநகர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். அப்போது கூர்நோக்கு இல்லத்தில் இருந்து எப்படி தப்பித்து சென்றார்கள்? என்று விசாரித்தனர்.

    இதில் எந்த பொருளையும் உடைக்காமலும், சாதாரணமாக 6 சிறுவர்கள் தப்பித்து சென்றதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதனை தொடர்ந்து கடலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு கரிக்கால் பாரிசங்கர் தலைமையில் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு வந்தனர்.

    கடலூர் கம்மியம்பேட்டை பகுதியில் போலீசார் சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது 2 சிறுவர்கள் நடந்து வந்து கொண்டிருந்தனர். அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது, அவர்கள் கூர்நோக்கு இல்லத்தில் இருந்து தப்பித்து வந்தது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து 2 சிறுவர்களை போலீசார் மீட்டனர்.

    மேலும் மீதம் உள்ள 4 சிறுவர்கள் எந்த ஊரை சேர்ந்தவர்கள்? என்னென்ன வழக்கில் சம்பந்தப்பட்டுள்ளார்கள்? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்களது பெற்றோர்கள் மற்றும் உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த சம்பவம் கடலூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×