search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆழ்வார்திருநகரி அருகே வீடு புகுந்து 55 பவுன் நகை, பணம் கொள்ளை
    X

    கொள்ளை நடந்த வீட்டை படத்தில் காணலாம்.


    ஆழ்வார்திருநகரி அருகே வீடு புகுந்து 55 பவுன் நகை, பணம் கொள்ளை

    • வீட்டில் கதவுகள் எதுவும் உடைக்கப்படாத நிலையில், மர்மநபர்கள் உள்ளே நுழைந்தது எப்படி? என்பது போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது.
    • வீட்டில் ஆள் இல்லாததை அறிந்தே மர்மநபர்கள் கைவரிசை காட்டி இருக்கலாம் எனவும், வீட்டை பற்றி நன்கு தெரிந்தவர்களே கொள்ளையில் ஈடுபட்டிருக்கலாம் எனவும் போலீசார் கருதுகின்றனர்.

    தென்திருப்பேரை:

    தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார்திருநகரி அருகே உள்ள தங்கையாபுரம் வேத கோவில் தெருவை சேர்ந்தவர் ஞானமணி. இவரது மனைவி லலிதா (வயது 65).

    இவர்களுக்கு 3 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். மகன்கள் 3 பேரும் பெங்களூரில் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். மகள் செய்துங்கநல்லூரில் வசித்து வருகிறார்.

    ஞானமணி இறந்துவிட்ட நிலையில், லலிதா மட்டும் வீட்டில் தனியாக வசித்து வருகிறார். அவர் கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு செய்துங்கநல்லூரில் வசிக்கும் தனது மகள் வீட்டிற்கு சென்றார்.

    இன்று காலை அவர் வீடு திரும்பினார். அப்போது வீட்டில் இருந்த 55 பவுன் நகை, ரூ.50 ஆயிரம் ரொக்கப் பணம் ஆகியவை கொள்ளை போயிருந்தது தெரிய வந்தது.

    இதுகுறித்து அவர் ஆழ்வார்திருநகரி போலீசில் புகார் செய்தார். சம்பவ இடத்துக்கு ஸ்ரீவைகுண்டம் டி.எஸ்.பி. மாயவன், இன்ஸ்பெக்டர் மணிவண்ணன், சப்-இன்ஸ்பெக்டர் செல்வம் மற்றும் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

    வீட்டில் கதவுகள் எதுவும் உடைக்கப்படாத நிலையில், மர்மநபர்கள் உள்ளே நுழைந்தது எப்படி? என்பது போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    வீட்டில் ஆள் இல்லாததை அறிந்தே மர்மநபர்கள் கைவரிசை காட்டி இருக்கலாம் எனவும், வீட்டை பற்றி நன்கு தெரிந்தவர்களே இச்சம்பவத்தில் ஈடுபட்டிருக்கலாம் எனவும் போலீசார் கருதுகின்றனர்.

    அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சம்பவ இடத்திற்கு கைரேகை நிபுணர்கள், மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது.

    அங்கு பதிவாகி இருந்த கைரேகைகள் மூலம் பழைய குற்றவாளிகள் யாரேனும் இச்சம்பவத்தில் ஈடுபட்டுள்ளார்களா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.

    Next Story
    ×