என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோவில் சாமி ஊர்வலத்தில் இரு தரப்பினர் மோதல்- 5 பேர் படுகாயம்
- குப்பம்மாசத்திரம் பகுதியில் புரட்டாசி மாதம் 4-வது வாரத்தை முன்னிட்டு சாமி ஊர்வலம் நடைபெற்றது.
- திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
திருவள்ளூர்:
திருவள்ளூரை அடுத்த குப்பம்மாசத்திரம் பகுதியில் புரட்டாசி மாதம் 4-வது வாரத்தை முன்னிட்டு சாமி ஊர்வலம் நடைபெற்றது.
அப்போது பாண்டூர் கன்னங்காரணி பகுதியை சேர்ந்த செல்வகுமார் என்பவர் தனது நண்பர்கள் சியோன், அபி ஆகியோருடன் மோட்டார் சைக்கிளில் சென்றார். சாமி ஊர்வலத்தில் வந்தவர்கள் அவர்களிடம் ஊர்வலம் செல்லும் வரை ஓரமாக இருக்குமாறு கண்டித்ததாக கூறப்படுகிறது. இதனால் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது.
பின்னர் இது கோஷ்டி மோதலாக மாறியது. ஆத்திரம் அடைந்த சாமி ஊர்வலத்தில் சென்ற குப்பம்மாசத்திரம் மேலகரம் பகுதியைச் சேர்ந்த சுரேஷ், சுதாகர், ராஜ், கோபி, பிரபு, மணிகண்டன், குமார், இளங்கோ ஆகிய 8 பேரும் செல்வகுமார் தரப்பினரை உருட்டுக் கட்டையால் சரமாரியாக தாக்கினர்.
பதிலுக்கு செல்வகுமார் மற்றும் அவரது உறவினர்களான கோபி, முகில், மாணிக்கராஜ், சீமோன், அபி, கில்லர் ஆகிய 7 பேரும் சேர்ந்து கோபி தரப்பினரை தாக்கினர்.
இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த தாக்குதலில் இரு தரப்பையும் சேர்ந்த 5 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மேலும் இரு தரப்பினரும் தனித்தனியாக திருவள்ளூர் தாலுகா போலீசில் புகார் செய்தனர். போலீசார் இது தொடர்பாக இரு தரப்பையும் சேர்ந்த 15 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.