search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ராஜபாளையம் பஸ் நிலையத்தில் சாமியார் அடித்துக்கொலை
    X

    ராஜபாளையம் பஸ் நிலையத்தில் சாமியார் அடித்துக்கொலை

    • கண்ணன் புதிய பஸ் நிலையத்தில் ரத்த காயங்களுடன் பிணமாக கிடந்தார்.
    • கொலை சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ராஜபாளையம்:

    விழுப்புரம் மாவட்டம் கிடார் அஞ்சல் அருகே உள்ள செல்லங்குப்பத்தைச் சேர்ந்தவர் கண்ணன் (வயது 60). இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியேறினார். பின்னர் காவி உடை அணிந்து சாமியார் போன்று ஊர் ஊராக சென்று யாசகம் பெற்று வாழ்ந்து வந்தார்.

    கடந்த சில மாதங்களுக்கு முன்பு விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்திற்கு வந்த கண்ணன், புதிய பஸ் நிலையம் கழிவறை அருகே தங்கியிருந்து யாசகம் பெற்று வந்தார். இந்த நிலையில் கண்ணன் புதிய பஸ் நிலையத்தில் ரத்த காயங்களுடன் பிணமாக கிடந்தார்.

    அவரை யாரோ அடித்துக் கொலை செய்துள்ளனர். இதுகுறித்து புதுப்பாளையம் கிராம நிர்வாக அதிகாரி பழனிமுருகன் ராஜபாளையம் தெற்கு போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் மன்னவன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    கண்ணன் கொலை தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது அவரது கொலையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.ராஜபாளையம் புதிய பஸ் நிலையம் பகுதியில் சுற்றித்திரியும் திருநங்கைகள் கணபதி சுந்தரநாச்சியார்புரத்தைச் சேர்ந்த ஜெனிதா (22), லட்சுமியாபுரத்தைச் சேர்ந்த மாளவிகா (19).

    சம்பவத்தன்று அவர்களது செல்போன்கள் தொலைந்து போனது. இதனை அங்கிருக்கும் சாமியார் கண்ணன் தான் எடுத்திருப்பார் என அவர்கள் சந்தேகித்தனர். இதுகுறித்து அவரிடம் கேட்டபோது வாக்குவாதம் முற்றியது.

    இதில் ஆத்திரமடைந்த ஜெனிதா, மாளவிகா மற்றும் அவர்களது நண்பர்கள் பாரதி சங்கர், ஜெயபிரகாஷ் ஆகிய 4 பேர் சேர்ந்து கண்ணனை சரமாரியாக அடித்து உதைத்துள்ளனர். இதில் மயங்கிய அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்திருக்கிறார்.

    மேற்கண்ட தகவல் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து திருநங்கைகள் ஜெனிதா, மாளவிகா, வாலிபர்கள் பாரதி சங்கர், ஜெயபிரகாஷ் ஆகிய 4 பேரையும் போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    பஸ் நிலையத்தில் சாமியாரை திருநங்கைகள் உள்பட 4 பேர் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் ராஜபாளையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    Next Story
    ×