search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மயிலாடுதுறை அருகே 2 பேர் திடீர் மரணம்- மதுவில் சயனைடு கலந்திருப்பது உறுதி
    X

    பழனிகுருநாதன், பூராசாமி.

    மயிலாடுதுறை அருகே 2 பேர் திடீர் மரணம்- மதுவில் 'சயனைடு' கலந்திருப்பது உறுதி

    • பட்டறையில் இருந்து டாஸ்மாக் மதுபானம் தஞ்சாவூரில் உள்ள பகுப்பாய்வு கூடத்திற்கு பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
    • ஒரு மதுபாட்டில் பெவிக்குவிக் கொண்டு ஒட்டி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

    குத்தாலம்:

    மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுகா, தத்தங்குடி மெயின்ரோட்டை சேர்ந்தவர் பழனிகுருநாதன் (வயது55). இவர் மங்கைநல்லூர் மெயின்ரோட்டில் கொல்லுப்பட்டறை வைத்து நடத்தி வந்தார்.

    இவரிடம் அதே பகுதியை சேர்ந்த பூராசாமி (65) என்பவர் வேலை பார்த்து வந்தார். இருவருக்கும் மதுகுடிக்கும் பழக்கம் உள்ளதாக கூறப்படுகிறது.

    இந்நிலையில், நேற்று வழக்கம்போல் இருவரும் பட்டறையில் மாலை 5 மணிவரை வேலை செய்துள்ளனர். சிறிது நேரத்தில் பட்டறையில் பழனிகுருநாதன், பூராசாமி இருவரும் மயங்கிய நிலையில் கிடந்துள்ளனர்.

    அவர்களுக்கு அருகில் 2 டாஸ்மாக் மதுபாட்டில்கள் இருந்தது. அதில் ஒன்றில் பாதி மதுபானமும், மற்றொன்று பிரிக்காமலும் அப்படியே இருந்துள்ளது. இதையடுத்து அக்கம் பக்கத்தினர் இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களை பரிசோதித்த டாக்டர்கள் 2 பேரும் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினர்.

    இதுகுறித்து தகவல் அறிந்ததும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சஞ்சீவ்குமார் தலைமையில் பெரம்பூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மதுபாட்டில்களை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். இதற்கிடையில், டாஸ்மாக் மதுபானம் குடித்ததால் தான் 2 பேரும் இறந்தனர் என உறவினர்கள் குற்றம் சாட்டினர்.

    தொடர்ந்து பழனிகுருநாதன், பூராசாமி ஆகியோரின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக திருவாரூர் அரசு மருத்துவகல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பப்பட்டு பிரேத பரிசோதனை நடத்தப்பட உள்ளது. அதன் பிறகே மது குடித்ததில் தான் 2 பேரும் இறந்தனரா? அல்லது வேறு ஏதும் காரணமா? என்பது தெரியவரும்.

    மேலும், பட்டறையில் இருந்து டாஸ்மாக் மதுபானம் தஞ்சாவூரில் உள்ள பகுப்பாய்வு கூடத்திற்கு பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    இதுகுறித்து கலெக்டர் மகாபாரதி கூறியிருப்பதாவது:-

    மயிலாடுதுறை அருகே நேற்று திடீரென 2 பேர் உயிரிழந்தனர். அவர்கள் மது குடித்ததால் தான் உயிரிழந்தனர் என உறவினர்கள் குற்றஞ்சாட்டினர். இந்நிலையில், அந்த மதுபாட்டில்கள் பகுப்பாய்வு கூடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. முதற்கட்ட தடயவியல் அறிக்கைபடி அவர்கள் குடித்த மதுவில் சயனைடு கலந்திருப்பது உறுதியானது.

    அதில், ஒரு மதுபாட்டில் பெவிக்குவிக் கொண்டு ஒட்டி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த முழு ஆய்விக்கு பிறகு உண்மை நிலவரம் தெரியவரும். இதற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதனிடையே மாவட்ட ஆட்சியர் பொய் சொல்வதாக குற்றம்சாட்டி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    Next Story
    ×