என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

மெட்ரோ ரெயில் பணியில் விபத்து- போலி சான்றிதழ் தயாரித்து கிரேன் ஆபரேட்டரை பணியில் சேர்த்த 2 என்ஜினீயர்கள் கைது
- ராமாபுரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
- போலீசார் 5 பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்து என்ஜினீயர்கள் சிவனாந்த நாயக், பொன் சந்திரசேகர் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.
போரூர்:
சென்னையில் போக்கு வரத்து நெரிசலை குறைக்கும் வகையில் 2-ம் கட்டமாக மெட்ரோ ரெயில் பணி 3 வழித்தடங்களில் நடந்து வருகிறது.
கிண்டி - போரூரை இணைக்கும் மவுண்ட்-பூந்தமல்லி நெடுஞ்சாலையில் மெட்ரோ ரெயில் கட்டுமான பணிகள் விறு விறுப்பாக நடைபெற்று வருன்றன.
இந்த நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் 27-ந் தேதி அதிகாலை மாநகர பஸ் ஒன்று குன்றத்தூரில் இருந்து போக்குவரத்து ஊழியர்கள் 8 பேருடன் ஆலந்தூர் நோக்கி மவுண்ட- பூந்தமல்லி நெடுஞ்சாலை வழியாக சென்று கொண்டிருந்தது.
ராமாபுரம் அருகே பஸ் வந்தபோது மெட்ரோ ரெயில் பணிக்காக இரும்பு கம்பிகளை "டிரெய்லர் லாரியில்" ஏற்றிக்கொண்டு இருந்தனர். அப்போது ராட்சத கிரேனில் இருந்து இரும்பு கம்பிகள் திடீரென சரிந்து பஸ் மீது விழுந்தது. இதில் மாநகர பஸ் டிரைவர்கள் 2 பேர் மற்றும் டிரெய்லர் லாரி டிரைவர் ஆகியோர் பலத்த காயத்துடன் உயிர் தப்பினர்.
இது தொடர்பாக ராமாபுரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் கிரேன் ஆபரேட்டராக வேலை பார்த்து வந்த தர்மேந்திர குமார் சிங் என்பவர் முன் அனுபவம் ஏதும் இல்லாமல் போலி சான்றிதழ் மூலம் வேலைக்கு சேர்ந்தது தெரிய வந்தது.
அவருக்கு 5 வருடம் அனுபவம் உள்ளது போல் போலியாக சான்றிதழ் தயாரித்து கொடுத்து பிரபல கட்டுமான நிறுவனத்தின் என்ஜினீயர்கள் சிவனாந்த நாயக், பொன் சந்திரசேகர் ஆகிய இருவரும் வேலைக்கு சேர்த்ததும் தெரிய வந்தது.
இதையடுத்து போலீசார் 5 பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்து என்ஜினீயர்கள் சிவனாந்த நாயக், பொன் சந்திரசேகர் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.






