search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பாவூர்சத்திரத்தில் ஆசிரிய தம்பதியை கட்டி போட்டு 140 பவுன் நகை-ரூ.10 லட்சம் கொள்ளை
    X

    கொள்ளை நடந்த வீட்டை படத்தில் காணலாம்.


    பாவூர்சத்திரத்தில் ஆசிரிய தம்பதியை கட்டி போட்டு 140 பவுன் நகை-ரூ.10 லட்சம் கொள்ளை

    • நேற்று இரவு ஜாய் சொர்ணதேவி வீட்டின் நுழைவு வாயிலில் பேப்பர் படித்து கொண்டு இருந்துள்ளார். அப்போது வீட்டின் காம்பவுண்டு சுவர் வழியாக 3 மர்ம நபர்கள் ஏறி குதித்து உள்ளனர்.
    • அவர்கள் குல்லா அணிந்து கொண்டு உள்ளே நுழைந்து வாசலில் இருந்த ஜாய் சொர்ண தேவியின் வாயில் துணியை வைத்து கயிறால் கட்டி உள்ளனர்.

    தென்காசி:

    தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே உள்ள ஆவுடையனூர் சிதம்பரநாடார் தெருவில் வசித்து வருபவர் அருணாசலம்(வயது 88). இவரது மனைவி ஜாய் சொர்ண தேவி(83).

    இவர்கள் 2 பேரும் ஆசிரியர்களாக பணியாற்றி ஓய்வு பெற்றவர்கள். இவர்களுக்கு 2 மகள்கள் மற்றும் 1 மகன் உள்ளனர்.

    இதில் மகன் என்.எல்.சி.யில் வேலை பார்த்து வருகிறார். மூத்த மகள் ராணி வள்ளியூரில் பொதுப்பணித்துறை அலுவலகத்தில் வேலை பார்த்து வருகிறார். மற்றொரு மகள் வெளியூரில் வசித்து வருகிறார். இவர்கள் 3 பேருக்கும் திருமணமாகி விட்டது.

    அருணாசலம், ஜாய் சொர்ணதேவி ஆகியோர் ராணியின் பராமரிப்பில் இருந்து வருகின்றனர். தினமும் பணிமுடிந்து இரவு 8 மணிக்கு ராணி ஆவுடையானூர் சென்றடைவார். அதுவரை அவரது பெற்றோர் தனியாகவே வீட்டில் இருப்பார்கள்.

    இந்நிலையில் நேற்று ராணி பணிபுரியும் அலுவலகத்தில் ஒருவர் பணி ஓய்வு பெற்றதால் அந்த நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு இரவு 10 மணிக்கு வீட்டுக்கு வந்து சேர்ந்தார். அப்போது வீட்டின் காம்பவுண்டு கதவு திறந்து கிடந்தது.

    இதனால் அதிர்ச்சி அடைந்த ராணி உள்ளே சென்று பார்த்தபோது அருணாசலம், ஜாய் சொர்ணதேவி ஆகியோர் வாயில் துணி வைக்கப்பட்டு இருக்கைகளில் அமர வைக்கப்பட்ட நிலையில் கயிறால் கட்டப்பட்டு இருந்தனர்.

    உடனே ராணி, 2 பேரின் கட்டுகளையும் அவிழ்த்து விட்டார். தொடர்ந்து அவர்களிடம் கேட்டபோது மர்மநபர்கள் 2 பேரையும் கட்டி போட்டுவிட்டு நகை-பணத்தை கொள்ளையடித்து சென்றதாக தெரிவித்தனர்.

    இதுதொடர்பாக ராணி பாவூர்சத்திரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து வந்தனர். தென்காசி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிருஷ்ணராஜ் அங்கு சென்று ஆய்வு செய்தார்.

    நேற்று இரவு ஜாய் சொர்ணதேவி வீட்டின் நுழைவு வாயிலில் பேப்பர் படித்து கொண்டு இருந்துள்ளார். அப்போது வீட்டின் காம்பவுண்டு சுவர் வழியாக 3 மர்ம நபர்கள் ஏறி குதித்து உள்ளனர்.

    அவர்கள் குல்லா அணிந்து கொண்டு உள்ளே நுழைந்து வாசலில் இருந்த ஜாய் சொர்ண தேவியின் வாயில் துணியை வைத்து கயிறால் கட்டி உள்ளனர். பின்னர் உள்ளே சென்று அங்கிருந்த அருணாசலத்தை வாயில் துணியை வைத்து கயிறால் கட்டிவிட்டு பீரோ சாவியை எடுத்துள்ளனர்.

    பீரோ இருந்த அறைக்கு சென்ற அந்த கும்பல் அதில் இருந்த 140 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ.10 லட்சம் பணம் உள்ளிட்டவற்றை கொள்ளையடித்தனர். பின்னர் கண்ணிமைக்கும் நேரத்தில் அங்கிருந்து அந்த கும்பல் தப்பி சென்றது.

    இதற்கிடையே இரவு 10 மணிக்கு ராணி வீட்டுக்கு வந்து பார்த்தபோது தான் கொள்ளை சம்பவம் நடந்தது தெரியவந்துள்ளது. இதையடுத்து போலீசார் மோப்பநாய் மூலமாக அந்த பகுதியில் சோதனை செய்தனர்.

    மோப்பநாய் அங்கிருந்து 2 தெருக்களுக்கு ஓடி சென்று நின்றுவிட்டது. யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம கும்பல் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமிராக்களை ஆய்வு செய்து வருகின்றனர்.

    Next Story
    ×