என் மலர்
உள்ளூர் செய்திகள்

போராட்டத்தில் ஈடுபட்டவர்களை தாக்கிய சப்-இன்ஸ்பெக்டர் ஆயுதப்படைக்கு மாற்றம்
- போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பழனிவேல் போராட்டக்காரர்களை தாக்குவது போன்ற வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.
- நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் உத்தரவின் பேரில் தாக்குதலில் ஈடுபட்ட சப்-இன்ஸ்பெக்டர் பழனிவேலை ஆயுதப்படைக்கு மாற்றி உத்தரவிட்டார்.
நாகப்பட்டினம்:
நாகப்பட்டினம் மாவட்டம், நாகூர் அருகே வாஞ்சூர் ரவுண்டானாவில் இருசக்கர வாகனத்தில் சாராயம் கடத்தலை தடுக்கும் வகையில் சாலையில் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், அங்குள்ள 4 சாலைகளில் 2 சாலைகள் ஒருவழி பாதையாக தடுப்புகள் அமைக்கப்பட்டு மாற்றப்பட்டுள்ளது.
இதன் காரணமாக அவ்வழியாக செல்லும் பஸ்கள் மற்றும் கனரக வாகனங்கள் சாலை வளைவில் திரும்ப முடியாமல் மிகுந்த சிரமத்தை சந்திக்கின்றனர்.
இந்நிலையில், கும்பகோணத்தில் இருந்து நாகை வந்த 2 அரசு பஸ்கள் சாலையில் தடுப்புகள் அமைக்கப்பட்டு இருந்ததால் அவ்வழியாக செல்ல முடியாமல் நீண்ட நேரம் பயணிகளுடன் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இதனை தொடர்ந்து, அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் சாலை தடுப்புகளை அகற்றக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து, தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த நாகூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பழனிவேல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை தாக்கியதாக கூறப்படுகிறது. தொடர்ந்து, போராட்டக்காரர்களை போலீசார் கைது செய்தனர்.
இந்நிலையில், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பழனிவேல் போராட்டக்காரர்களை தாக்குவது போன்ற வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.
அதனை தொடர்ந்து, நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் உத்தரவின் பேரில் தாக்குதலில் ஈடுபட்ட சப்-இன்ஸ்பெக்டர் பழனிவேலை ஆயுதப்படைக்கு மாற்றி உத்தரவிட்டார்.