என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

போராட்டத்தில் ஈடுபட்ட விஜயபாரதி.
பெட்ரோல் பங்க் வைப்பதற்காக அண்ணனுக்கு பணத்தை கொடுத்துவிட்டு வீதியில் பிச்சை எடுத்த தங்கை
- 'விழிப்புடன் இருங்கள் பெண்களே...யாரையும் நம்பாதீர்கள்...நம்பி உங்கள் பணத்தை கொடுக்காதீர்கள்...
- எனது சொந்த அண்ணன் பெட்ரோல் பங்க் வைக்க வேண்டி கேட்டதால் பணம் ஏற்பாடு செய்து கொடுத்தேன். அந்த பணத்தை திருப்பி கேட்டபோது அவர் தர மறுத்தார்.
அரூர்,
தருமபுரி மாவட்டம் அரூரை அடுத்த நாசம் கொட்டாய் என்ற பகுதியை சேர்ந்தவர் அருண்பிரசாத். இவரது சகோதரி விஜயபாரதி. ஐ.டி. ஊழியரான விஜயபாரதி திருமணமாகி மும்பையில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்த நிலையில் கொரோனா காலத்தில் அருண்பிரசாத் ஊரில் பெட்ரோல் பங்க் வைப்பதற்காக தங்கை விஜயபாரதியிடம் பணம் கேட்டார்.
இதையடுத்து தனது சொந்த அண்ணன் தானே கேட்கிறார் என எண்ணி விஜயபாரதி அண்ணனுக்கு ரூ.25 லட்சம் கொடுத்தார். கொரோனா காலம் என்பதால் அப்போது ஆன்லைன் மூலம் இந்த பணம் அனுப்பப்பட்டது. அதன்பிறகும் அருண்பிரசாத் தங்கையிடம் பணம் கேட்டார். இதையடுத்து விஜயபாரதி தனது மாமியார் மூலம் ரூ.15½ லட்சம் ஏற்பாடு செய்து கொடுத்தார்.
பணத்தை பெற்ற அருண்பிரசாத் தனது மனைவி பெயரில் பெட்ரோல் பங்க் வைத்து நடத்தி வருகிறார். இதை தொடர்ந்து விஜயபாரதி கொடுத்த பணத்தை அண்ணனிடம் திருப்பி கேட்டார். அதற்கு அருண்பிரசாத் மறுத்ததாக தெரிகிறது. இதையடுத்து விஜயபாரதி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் மனு கொடுத்தார். இதை தொடர்ந்து அவர் ரூ.25 லட்சத்தை திருப்பி கொடுத்தார்.
மீதம் உள்ள ரூ.15½ லட்சத்தை கேட்டபோது அதை திருப்பி கொடுக்காமல் காலம் தாழ்த்தி வந்தார். இதையடுத்து விஜயபாரதி அரூருக்கு வந்தார். அங்கு அண்ணனின் பெட்ரோல் பங்க் முன்பாக அமர்ந்து பிச்சை எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டார்.
அவர் போராட்டம் நடத்திய இடத்தில் வைக்கப்பட்டிருந்த பேனரில் 'விழிப்புடன் இருங்கள் பெண்களே... யாரையும் நம்பாதீர்கள்... நம்பி உங்கள் பணத்தை கொடுக்காதீர்கள்... முக்கியமாக உடன்பிறப்புகளை நம்பினால் இதுவே நிலைமை...' என்று எழுதப்பட்டிருந்தது.
அண்ணனுக்கு பணத்தை கொடுத்துவிட்டு பெண் பிச்சை எடுத்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த இடத்தில் ஏராளமானோர் கூடினார்கள். இது தொடர்பாக விஜயபாரதி கூறியதாவது:-
எனது சொந்த அண்ணன் பெட்ரோல் பங்க் வைக்க வேண்டி கேட்டதால் பணம் ஏற்பாடு செய்து கொடுத்தேன். அந்த பணத்தை திருப்பி கேட்டபோது அவர் தர மறுத்தார். இதனால் எஸ்.பி.யிடம் புகார் கொடுத்தேன். அதன்பிறகு ரூ.25 லட்சத்தை தந்த அவர் மீதி பணத்தை தர மறுக்கிறார்.
அண்ணனுக்கு பணம் கொடுத்ததால் எனது குடும்பத்தில் பிரச்சினை ஏற்பட்டு வீதியில் தவிக்கும் நிலை உருவாகிவிட்டது. பொதுவாக அண்ணன்கள் அக்காள், தங்கையை வாழவைத்து பார்ப்பார்கள். ஆனால் இந்த அண்ணன் எனக்கு அநீதி இழைத்துவிட்டார்.
இவ்வாறு அவர் கூறினார். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.






