search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ரியல் எஸ்டேட் அதிபர் வெட்டிக்கொலை: குற்றவாளிகளை பிடிக்க தனிப்படை அமைப்பு
    X

    கேசவன்.

    ரியல் எஸ்டேட் அதிபர் வெட்டிக்கொலை: குற்றவாளிகளை பிடிக்க தனிப்படை அமைப்பு

    • கேசவன் ஓட்டி சென்ற மோட்டார்சைக்கிள் மீது மோதினார்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    தேன்கனிக்கோட்டை,

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் சாந்தி நகரை சேர்ந்தவர் ராமதாஸ். இவரது மகன் கேசவன் (வயது45). ரியல் எஸ்டேட் அதிபர். மேலும் பைனான்ஸ் தொழில் நடத்தி வந்ததுடன், செங்கல் சூளையும் வைத்திருந்தார். இவர் ஓசூர், தேன்கனிக்கோட்டை சுற்று வட்டார பகுதிகளில் பைனான்ஸ் தொழில் செய்து வந்தார்.

    இந்த நிலையில் நேற்று மாலை தளி அருகே உள்ள என்.கொத்தூர் கிராமத்தைச் சேர்ந்த மோகன் என்பவரிடம் பணம் வாங்குவதற்காக கேசவன் மோட்டார்சைக்கிளில் வந்தார். தளி அருகே கே.மல்லசந்திரம் அருகில் அவர் சென்ற போது அவரை பின்தொடர்ந்து கார் ஒன்று வந்தது. திடீரென்று அந்த காரை ஓட்டி வந்தவர், கேசவன் ஓட்டி சென்ற மோட்டார்சைக்கிள் மீது மோதினார்.

    இதில் நிலைதடுமாறி கீழே விழுந்த கேசவனை காரில் இருந்து இறங்கிய 8 பேர் கொண்ட கும்பல் வீச்சரிவாளுடன் சரமாரியாக வெட்டியது. அவர்களிடம் இருந்து தப்பிக்க கேசவன் ஓடினார். ஆனாலும் அந்த கும்பல் விடாமல் தாங்கள் வைத்திருந்த வீச்சரிவாளால் கேசவனை ஓட, ஓட சரமாரியாக வெட்டியது. இதில் அவரது தலை, கழுத்து என உடலில் பல இடங்களில் சரமாரியாக வெட்டு விழுந்தது.

    இதில் கேசவன் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பரிதாபமாக இறந்தார். அவரை கொலை செய்ததும் அந்த கும்பல் தாங்கள் வந்த காரில் ஏறி தப்பி சென்றது.

    இது குறித்து தளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கொலை செய்யப்பட்ட கேசவனின் செல்போன் சம்பவ இடத்தில் கைப்பற்றப்பட்டது. அதில் 'ஆசிட்' ஊற்றப்பட்டதால் உருகி போய் காணப்பட்டது. அந்த செல்போனையும் ஆய்வுக்காக போலீசார் எடுத்து சென்றுள்ளனர். குற்றவாளிகளை பிடிக்க போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகராஜ் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. போலீசார் அவர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.

    Next Story
    ×