என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஆயத்த ஆடை உற்பத்தி அலகு அமைக்க நிதி உதவி
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர் மரபினர் இன மக்களின் பொருளாதார மேம்பாட்டிற்காகவும், மாறிவரும் சூழலுக்கு ஏற்பவும், இவ்வின மக்களில் 10 நபர்களைக் கொண்ட குழுவாக அமைத்து, ஆயத்த ஆடையக உற்பத்தி அலகு தலா ரூ.3 லட்சம் வீதம் தமிழகம் முழுவதும் 25 அலகுகள் ஏற்படுத்த அரசு ஆணை வெளியிட்டுள்ளது.
தையல் தொழிலில் ஈடுபட்டு வரும் இவ்வினத்தை சேர்ந்த ஆண், பெண் 10 நபர்களைக் கொண்டு ஒரு குழு அமைத்து அக்குழுவிற்கு ஆயத்த ஆடையக உற்பத்தி அலகு அமைக்க உபகரணங்கள் வாங்க அதற்கான நிதி தோராயமாக வழங்கப்படும்.
தகுதிகள் மற்றும் நிபந்தனைகள் குழு உறுப்பினர்களின் குறைந்தபட்ச வயது வரம்பு 20 ஆகும். குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறையின் மூலம் பயிற்சி பெற்ற நபர்களைக் கொண்ட குழுவிற்கு முன்னுரிமை வழங்கப்படும். விதவை, கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் மற்றும் ஆதரவற்ற விதவை பெண்கள் அமைந்துள்ள குழுவிற்கு முன்னுரிமை வழங்கப்படும்.
10 நபர்களைக் கொண்ட ஒரு குழுவாக இருத்தல் வேண்டும். 10 பேருக்கும் தையல் தொழில் தேர்ந்தெடுத்தல் அவசியம். குழு உறுப்பினர்கள் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர் மரபினர் இனத்தை சார்ந்தவராக இருக்க வேண்டும்.
குழுவில் உள்ள பயனாளிகளின் ஆண்டு வருமானம் ரூ.1 லட்சத்திற்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.எனவே ராணிப்பேட்டை மாவட்டத்தில் இவ்வினத்தை சேர்ந்த மக்கள் தகுதியான குழுக்களை அமைத்து குழுவின் மூலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் செயல்படும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை தொடர்பு கொண்டு விண்ணப்பங்களை பெற்று விண்ணப்பித்து பயன் பெறலாம்.
இந்த தகவலை மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்தார்.






