என் மலர்
உள்ளூர் செய்திகள்

சேலம் மாவட்டத்தில் மழை நீடிப்பு
- ஏத்தாப்பூர், வீரகனூர், கரியகோவில் உள்பட பல பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கனமழை.
- மழையை தொடர்ந்து மாவட்டம் முழுவதும் குளிர்ந்த காற்று வீசியது.
சேலம்:
சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக நேற்று மாலை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கன மழை பெய்தது.
குறிப்பாக சேலம் கிழக்கு மாவட்ட பகுதிகளான வாழப்பாடி, ஏத்தாப்பூர், வீரகனூர், கரியகோவில் உள்பட பல பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கன மழை கொட்டியது. இந்த மழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகள் மற்றும் வயல்வெளிகளில் தண்ணீர் தேங்கியது. மழையை தொடர்ந்து மாவட்டம் முழுவதும் குளிர்ந்த காற்று வீசியது.
ஏற்காட்டில் நேற்று பெய்த சாரல் மழையால் அங்கு குளிர்ச்சியான சீதோஷ்ண நிலை நிலவி வருகிறது. இதனால் அங்கு ரம்மியமான சூழல் நிலவியதால் அங்கு வசிக்கும் பொது மக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் குதூகலம் அடைந்தனர்.
சேலம் மாநகரில் நேற்றிரவு 7 மணியளவில் தொடங்கிய மழை சாரல் மழையாக அரை மணி நேரம் பெய்தது . மழையை தொடர்ந்து சேலம் மாநகரிலும் குளிர்ச்சியான சீதோஷ்ண நிலை நிலவியது. மாவட்டத்தில் அதிக பட்சமாக வாழப்பாடியில் 28 மி.மீ. மழை பதிவாகி உள்ளது. சேலம் மாநகர் 8.4, ஏற்காடு 12.8, வாழப்பாடி 28, ஆனைமடுவு 17, ஆத்தூர்11.6, கெங்கவல்லி 10, தம்மம்பட்டி 15, ஏத்தாப்பூர் 27, கரியகோவில் 22, வீரகனூர் 20, நத்தக்கரை 15, ஓமலூர் 1.5, டேனீ ஷ்பேட்டை 1 மி.மீ. என மாவட்டம் முழுவதும் 189.80 மி.மீ. மழை பதிவாகி உள்ளது.






