search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தொகுப்பு வீடுகளை சீரமைக்க மனு
    X

    ஊத்தங்கரை அருகே பழுதடைந்துள்ள தொகுப்பு வீடுகளை சீரமைத்து தரக் கோரி கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுக்க வந்த பொதுமக்களை படத்தில் காணலாம்.

    தொகுப்பு வீடுகளை சீரமைக்க மனு

    • வீடுகள் கட்டி 30 ஆண்டுகள் ஆகி விட்ட நிலையில் மிகவும் பாழடைந்து உள்ளது.
    • தொகுப்பு வீடுகளை பராமரிப்பு செய்திட உரிய நடவடிக்கை எடுக்க மனு கொடுக்கப்பட்டது.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வீரன்வட்டம் கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் சார்பாக தலித் விடுதலை இயக்க மாநில தலைவர் கருப்பையா, மாவட்ட செயலாளர் வெங்கடாசலம் மற்றும் சிலர் நேற்று மனு கொடுத்தனர். அதில் கூறியிருப்பதாவது:-

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை தாலுகா திருவனம்பட்டி கிராமம் அருகே உள்ள வீரன்வட்டம் பகுதியில் 20 தாழ்த்தப்பட்ட சமுதாய குடும்பங்கள் நிலம் இல்லாத விவசாய கூலி தொழிலாளர்களாக வாழ்ந்து வருகிறார்கள்.

    அவர்களுக்கு அரசால் கடந்த 1991-1992-ம் நிதி ஆண்டில் இந்திரா நினைவு குடியிருப்பு திட்டம் மூலம் இலவச தொகுப்பு வீடுகள் கட்டி கொடுக்கப்பட்டது. இந்த வீடுகள் கட்டி 30 ஆண்டுகள் ஆகி விட்ட நிலையில் மிகவும் பாழடைந்து உள்ளது. மழை காலங்களில் வீடுகளில் தண்ணீர் ஒழுகி வீட்டிற்குள் வருகிறது. இதனால் தொகுப்பு வீடுகள் எந்த நேரம் இடிந்து விழுமோ என்ற அச்சத்துடன் சிரமத்துடன் வாழ்ந்து வருகிறோம்.

    அதனால் பயனாளிகள் 15 பேருக்கு அரசால் வழங்கப்படும் புனரமைப்பு திட்டத்தின் அடிப்படையில் 30 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட தொகுப்பு வீடுகளை பராமரிப்பு செய்திட உரிய நடவடிக்கை எடுக்க கடந்த 18.8.2022 அன்று மனு கொடுக்கப்பட்டது. அதன் அடிப்படையில் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க கடந்த 5.9.2022 அன்று பரிந்துரைத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    எனவே தொடர் கன மழையை கருத்தில் கொண்டு பாதிக்கப்பட்டுள்ள தாழ்த்தப்பட்ட சமுதாய பயனாளிகளின் குடியிருப்பு களை பாதுகாக்க புனரமைப்பு திட்டங்களை நடைமுறைப்படுத்த கேட்டுக் கொள்கிறோம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×