என் மலர்
உள்ளூர் செய்திகள்

பல்லாவரம் அருகே மாமூல் கொடுக்க மறுத்த வியாபாரியை கடத்தி நகை பறிப்பு
தாம்பரம்:
பல்லாவரம் அடுத்த அனகாபுத்தூர், காமராஜர் நகர் பகுதியை சேர்ந்தவர் சசிகுமார். இவரது மகன் யோகேஸ்வரன். இவர்கள் அனகாபுத்தூர் பஜார் வீதியில் மளிகை கடை நடத்தி வருகின்றனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு கடையில் இருந்த சசிக்குமார் மற்றும் அவரது மகன் யோகேஸ்வரனிடம் வாலிபர்கள் சிலர் மாமூல் கேட்டு மிரட்டினர். ஆனால் அவர்கள் பணம் கொடுக்க மறுத்தனர்.
இந்த நிலையில் கடையில் இருந்து வீட்டுக்கு சென்ற யோகேஸ்வரனை 4 பேர் கும்பல் கத்தி முனையில் பொழிச்சலூர் பகுதிக்கு கடத்தி சென்று தாக்கினர்.
மேலும் அவர் அணிந்திருந்த 2 பவுன் செயின், ஒரு பவுன் மோதிரம் மற்றும் பணம், செல்போன் ஆகியவற்றை பறித்துக்கொண்டு மர்ம நபர்கள் தப்பி சென்று விட்டனர்.
இது குறித்து யோகேஸ்வரன் சங்கர் நகர் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.






