search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சிறுமியை கடத்தி திருமணம் செய்த பெயிண்டர் கைது
    X

    சிறுமியை கடத்தி திருமணம் செய்த பெயிண்டர் கைது

    • அக்கம் பக்கத்தினரிடம் நடத்திய விசாரணையில் சிறுமியை லங்கேஷ்வரன் கடத்தி சென்றது தெரிய வந்தது.
    • திருமண ஆசைகாட்டி சிறுமியை கடத்தி சென்ற லங்கேஷ்வரன் கோவிலில் வைத்து திருமணம் செய்து உள்ளார்.

    கோவை:

    கோவை மாவட்டம் கிணத்துக்கடவு பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமி. இவர் பிளஸ்-2 படித்து முடிந்து இருந்தார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு சிறுமிக்கு அந்த பகுதியில் தங்கி இருந்து பெயிண்டிங் வேலை செய்து வந்த மதுரை மாவட்டம் சோழவந்தானை சேர்ந்த லங்கேஷ்வரன் (வயது 28) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இது காதலாக மாறியது. 2 பேரும் அடிக்கடி நேரில் சந்தித்தும், செல்போனில் பேசியும் தங்களது காதலை வளர்த்து வந்தனர்.

    இந்தநிலையில் லங்கேஷ்வரன் சிறுமியை தனது வீட்டிற்கு அழைத்து சென்றார். அங்கு வைத்து சிறுமியிடம் திருமண ஆசைகாட்டி அவருடன் ஜாலியாக இருந்தார். இந்த விவகாரம் சிறுமியின் பெற்றோருக்கு தெரிய வரவே லங்கேஷ்வரன் அங்கு இருந்து தப்பிச் சென்றார்.

    சம்பவத்தன்று வீட்டில் இருந்த சிறுமி தனது பெற்றோரிடம் துணிகளை துவைக்க வெளியே செல்வதாக கூறி விட்டு சென்றார். ஆனால் நீண்ட நேரம் ஆகியும் அவர் வீட்டுக்கு திரும்பி வரவில்லை. இதனையடுத்து அவரை அவரது பெற்றோர் பல இடங்களில் தேடினர். ஆனால் அவரை கண்டு பிடிக்க முடியவில்லை. அக்கம் பக்கத்தினரிடம் நடத்திய விசாரணையில் சிறுமியை லங்கேஷ்வரன் கடத்தி சென்றது தெரிய வந்தது.

    இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் நெகமம் போலீசில் புகார் செய்தனர். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுமியை தேடி வந்தனர். பின்னர் மதுரை அருகே உறவினர் வீட்டில் சிறுமியுடன் தங்கி இருந்த லங்கேஷ்வரனை போலீசார் கைது செய்தனர். பின்னர் 2 பேரையும் போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் சிறுமியை திருமண ஆசைகாட்டி கடத்தி சென்ற லங்கேஷ்வரன் கணுவாயில் உள்ள விநாயகர் கோவிலில் வைத்து திருமணம் செய்து உள்ளார். பின்னர் மதுரையில் உள்ள உறவினர் வீட்டில் தங்கி இருந்ததும், சிறுமியிடம் உல்லாசமாக இருந்ததும் தெரிய வந்தது.

    இதனையடுத்து போலீசார் 17 வயது சிறுமியிடம் உல்லாசமாக இருந்து அவரை கடத்தி சென்று திருமணம் செய்த லங்கேஷ்வரன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    Next Story
    ×