search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    டெல்டா மாவட்டங்களில் தொடர் மழையால் நனைந்து வீணாகும் நெல் குவியல்கள்
    X

    மழையில் நனைந்த நெல்மணிகளை வேதனையுடன் காண்பிக்கும் விவசாயிகள்.

    டெல்டா மாவட்டங்களில் தொடர் மழையால் நனைந்து வீணாகும் நெல் குவியல்கள்

    • தார்ப்பாய்கள் போட்டு மூடப்பட்டிருந்தாலும் உள்ளே நெல்லின் ஈரப்பதம் மேலும் அதிகரித்து வருகிறது.
    • மழையால் அறுவடை செய்ய முடியாமல் பயிர்கள் பாதிக்கப்படும் என விவசாயிகள் வேதனை.

    தஞ்சாவூர்:

    தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடிக்காக முன்கூட்டியே மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டது.

    இதன் காரணமாக இந்த ஆண்டு வரலாறு காணாத வகையில் 5.32 லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடி செய்யப்பட்டது.

    தற்போது அறுவடை பணிகள் இறுதி கட்டத்தை எட்டி உள்ளன. கடந்த மாதம் சில நாட்கள் பெய்த மழையால் அறுவடை பணிகள் பாதிக்கப்பட்டன.

    மீண்டும் மழை இன்றி காணப்பட்டதால் அறுவடை பணிகள் வேகம் எடுத்தது. மேலும் சம்பா, தாளடி நடவு பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டு வந்தனர்.

    இந்த நிலையில் தஞ்சை, திருவாரூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் மீண்டும் கன மழை பெய்ய தொடங்கி உள்ளது. தஞ்சை, பூதலூர், திருக்காட்டுப்பள்ளி, நாகை, திருவாரூர், மன்னார்குடி, மயிலாடுதுறை, வேதாரண்யம் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் இரண்டு நாட்களாக விட்டுவிட்டு மழை பெய்கிறது. இன்றும் சில இடங்களில் மிதமான அளவில் மழை பெய்து வருகிறது.

    மேலும் ஐந்து நாட்களுக்கு கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தொடர் மழையால் டெல்டா மாவட்டங்களில் மீண்டும் குறுவை அறுவடை பாதிக்கப்பட்டுள்ளது.

    டெல்டா மாவட்டங்களில் 670 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன.

    இருப்பினும் தொடர்ந்து பெய்து வரும் மழையால் 17 சதவீதம் வரை ஈரப்பதம் உள்ள நெல் மட்டுமே கொள்முதல் செய்யப்படுகிறது.

    ஆனால் தொடர் மழையால் 19 முதல் 25 சதவீதம் வரை ஈரப்பதம் உள்ளதால் விவசாயிகள் கொள்முதல் நிலையங்களுக்கு கொண்டு வந்த நெல்லை பகல் நேரத்தில் காயவைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இதனால் ஏராளமான விவசாயிகள் ஒரு வாரத்துக்கு மேலாக நெல்லைக் கொட்டி வைத்து காத்து கிடக்கின்றனர். தேவையான அளவில் நெல் உலர்த்தும் எந்திரங்கள் இல்லாத காரணத்தால் மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் புறவழிச் சாலை, நெடுஞ்சாலைகளில் நெல்லை காய வைத்தனர்.

    ஆனால் மழை பெய்து வருவதால் தார்ப்பாய்கள் போட்டு மூடப்பட்டிருந்தாலும் உள்ளே நெல்லின் ஈரப்பதம் மேலும் அதிகரித்து வருகிறது.

    தரை வழியாக தார்ப்பாயை கடந்து தண்ணீர் உள்ளே செல்வதால் அடி பாகத்தில் உள்ள நெல்மணிகள் நனைந்து வருகின்றன.

    தொடர்ந்து மழை பெய்வதால் ஒவ்வொரு நாளும் கிலோ கணக்கில் நெல்மணிகள் மீண்டும் முளைத்து வீணாகும் அபாயம் உள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

    இதனால் நெல்லை எப்படி விற்பது என தெரியாமல் தவித்து வருகின்றனர்.

    இது தவிர பல்வேறு இடங்களில் அறுவடைக்கு தயாரான குறுவை பயிர்கள் சாய்ந்தன.

    ஏக்கருக்கு ரூ.40 ஆயிரம் செலவு செய்த நிலையில் மழையால் அறுவடை செய்ய முடியாமல் பயிர்கள் பாதிக்கப்பட்டு உள்ளதால் இழப்பு ஏற்படும் என விவசாயிகள் அஞ்சுகின்றனர்.

    எனவே அதிகாரிகள் உரிய கணக்கெடுப்பு செய்து இழப்பீடு வழங்க வேண்டும் என வலியுறுத்துகின்றனர்.

    இதேபோல் டெல்டா மாவட்டங்களில் கனமழையால் சம்பா, தாளடி நடவு பணிகளும் பதிக்கப்பட்டுள்ளது.

    தொடர்ந்து மழை பெய்யும் பட்சத்தில் குறுவை அறுவடை பணிகள் மேலும் பாதிப்பு அடைவதோடு நெற்பயிர்கள் நீரில் மூழ்கும் அபாயம் உள்ளது என்று விவசாயிகள் தெரிவித்தனர்.

    எனவே உடனடியாக ஈரப்பத தளர்வை தளர்த்தி 22 சதவீதம் வரை ஈரப்பதம் உள்ள நெல்லை கொள்முதல் செய்ய வேண்டும் . தேவையான அளவு நெல் உலர்த்தும் எந்திரங்களை பயன்படுத்த வேண்டும்.

    பாதிக்கப்பட்ட பயிர்களை கணக்கெடுப்பு செய்து இழப்பீடு வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×