search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கடந்த 2½ மாதங்களில் மேட்டுப்பாளையம்-நெல்லை சிறப்பு ரெயில் மூலம் ரூ.80 லட்சம்  வருமானம்
    X

    கடந்த 2½ மாதங்களில் மேட்டுப்பாளையம்-நெல்லை சிறப்பு ரெயில் மூலம் ரூ.80 லட்சம் வருமானம்

    • மேட்டுப்பாளையத்தில் இருந்து கடந்த ஏப்ரல் மாதம் 21-ந் தேதி முதல் ஜூன் 27-ந் தேதி வரை நெல்லைக்கு சிறப்பு வாராந்திர ரெயில் இயக்கப்பட்டது.
    • மக்களின் வரவேற்பை பெற்றதை தொடர்ந்து அந்த சிறப்பு ரெயில் நீடித்து தற்போதும் இயக்கப்பட்டு வருகிறது.

    கோவை:

    கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து கடந்த ஏப்ரல் மாதம் 21-ந் தேதி முதல் ஜூன் 27-ந் தேதி வரை நெல்லைக்கு சிறப்பு வாராந்திர ரெயில் இயக்கப்பட்டது.

    மேட்டுப்பாளையத்தில் இருந்து வெள்ளிக்கிழமை தோறும், நெல்லையில் இருந்து வியாழக்கிழமை தோறும் இந்த ரெயிலானது இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரெயில் கோவை, பொள்ளாச்சி, பழனி, திண்டுக்கல், மதுரை, தென்காசி வழியாக ராஜபாளையம், தென்காசி, அம்பை வழியாக கோடைகால சிறப்பு ரெயில்களாக இயக்கப்பட்டன.

    பொள்ளாச்சி-பழனி வழியாக தென்மாவட்டங்களுக்கு இரவு நேரத்தில் இயக்கப்படும் முதல் ரெயில் இதுவாகும்.இந்த வாராந்திர சிறப்பு ரெயில்களுக்கு பயணிகளிடையே சிறப்பான வரவேற்பு இருந்தது. மக்களின் வரவேற்பை பெற்றதை தொடர்ந்து அந்த சிறப்பு ரெயில் நீடித்து தற்போதும் இயக்கப்பட்டு வருகிறது.

    கடந்த ஏப்ரலில் இருந்து ஜூன் மாதம் வரையிலான 2½ மாதங்களில், மட்டும் நெல்லையில் இருந்து மேட்டுப்பாளையத்திற்கு இயக்கப்படும் ரெயிலில் 7,814 பயணிகளுடன் 38 லட்சம் வருமானமும், மேட்டுப்பாளையம்- நெல்லை ரெயில் 8,380 பயணிகளுடன் 42.14 லட்சம் வருமானமும் என மொத்தம் இந்த ரெயிலில் 16,194 பயணிகள் பயணித்துள்ளனர். இதன் மூலம் ரெயில்வேக்கு ரூ.80 லட்சம் வருமானம் கிடைத்துள்ளது

    எனவே வருமானம் தரும் இந்த மேட்டுப்பாளையம் நெல்லை வாராந்திர சிறப்பு ரெயிலை தொடர்ந்து இயக்க வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

    இதுகுறித்து பயணிகள் கூறியதாவது:-

    தற்போது வியாழக்கிழமை தோறும் நெல்லை- மேட்டுப்பாளையம், வெள்ளிக்கிழமை தோறும் மேட்டுப்பாளையம்-நெல்லை சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. தற்போது குற்றாலத்தில் குளுகுளு சீசன் நிலவி வருவதாலும், சாரல் விழா நடைபெற்று வருவதாலும் தென்காசி வழியாக செல்லும் இந்த நெல்லை- மேட்டுப்பாளையம் சிறப்பு ரெயில்களில் கூட்டம் அலைமோதுகிறது.

    மேலும் இந்த சிறப்பு ரெயில்கள் தட்கல் கட்டணத்தில் இயக்கப்படுவதால் ரெயில்வேக்கும் கணிசமான வருமானம் கிடைக்கிறது.

    எனவே தென்காசி, மதுரை, திண்டுக்கல், பழனி வழியாக மேட்டுப்பாளையத்துக்கும் இயக்கப்படும் இந்த சிறப்பு ரெயிலை நிரந்தரமாக இயக்க தென்னக ரெயில்வே நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    நெல்லை-மேட்டுப்பாளையம் சிறப்பு ரெயில் இயக்கம் வரும் 18-ந் தேதியுடன் முடிவடைய இருப்பதால் உடனடியாக தென்னக ரெயில்வே இந்த சிறப்பு ரெயில்களை நீட்டித்து இயக்க அறிவிப்பு வெளியிட வேண்டும். தற்போது ரெயில் இயங்கிக் கொண்டிருக்கும் போதே நீட்டித்து இயக்க அறிவிக்க வேண்டும். அப்போதுதான் பொதுமக்கள் தொடர்ந்து முன்பதிவு செய்து கொள்ள எளிதாக இருக்கும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    Next Story
    ×