search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் ஆடி களப பூஜை இன்று தொடங்கியது
    X

    கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் ஆடி களப பூஜை இன்று தொடங்கியது

    • கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் ஆடி மாதத்தில் 12 நாட்கள் களப பூஜை நடைபெறுவது வழக்கம்
    • அம்மனை வெள்ளி பல்லக்கில் எழுந்தருளச் செய்து கோவிலின் உள் பிரகாரத்தை சுற்றி மேளதாளம் முழங்க3 முறை வலம் வரச் செய்யும் நிகழ்ச்சி நடக்கிறது.

    கன்னியாகுமரி :

    கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் ஆடி களப பூஜை இன்று காலை தொடங்கியது. இதில் திருவாவடுதுறை ஆதினம் பங்கேற்றார். இந்த களபபூஜை 12 நாட்கள் தொடர்ந்து நடக்கிறது.

    ஆடி மாதம் அம்மனுக்கு உகந்த மாதமாகும். இந்த மாதத்தில் அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் பூஜைகள் நடைபெறுவது வழக்கம். அதேபோல கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் ஆடி மாதத்தில் 12 நாட்கள் களப பூஜை நடைபெறுவது வழக்கம்.

    இந்த ஆண்டுக்கான ஆடி களப பூஜை இன்று காலை தொடங்கியது. இதையொட்டி இன்று காலை 10 மணிக்கு திருவாவடுதுறை ஆதீனம் சார்பில் அதன் மடாதிபதி திருக்கயிலாய பரம்பரை 24-வது குருமகாசன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் கோவிலுக்கு வழங்கியதங்க குடத்தில் சந்தனம், களபம், ஜவ்வாது, பச்சைக்கற்பூரம், அக்கி, இக்கி, புனுகு, பன்னீர் மற்றும் வாசனை திரவியங்கள் கலந்து நிரப்பி சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. இந்த களப பூஜையை மாத்தூர் மட தந்திரி சங்கரநாராயணரூ நடத்தினார். பின்னர் அம்மனுக்கு எண்ணை, பால், பன்னீர், இளநீர், தேன், தயிர், களபம், சந்தனம், குங்குமம், பஞ்சாமிர்தம் போன்றவற்றால் அபிஷேகம் நடந்தது.

    அதன்பிறகு மேளதாளம் மற்றும் பஞ்சவாத்தியங்கள் முழங்க களபம் நிரப்பப்பட்ட தங்க குடத்தை கோவில் மேல்சாந்திகள் ஊர்வலமாக எடுத்து வந்து அம்மன் எழுந்தருளியிருக்கும் கருவறைக்குள் கொண்டு சென்றார்கள். அங்குதங்க குடத்தில் நிரப்பப்பட்ட களபத்தினால் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. இந்த களப அபிஷேகத்தை கோவில் மேல்சாந்திகள் நடத்தினார்கள். பின்னர் அம்மனுக்கு வைர கிரீடம், வைரக்கல் மூக்குத்தி மற்றும் தங்க ஆபரணங்கள் அணிவிக்கப்பட்டு சந்தனகாப்பு அலங்காரத்துடன் அம்மன் அருள்பாலிக்கும் நிகழ்ச்சி நடந்தது.

    11-30 மணிக்கு அலங்கார தீபாராதனை நடந்தது. இதில் திருவாவடுதுறை ஆதினம் திருக்கயிலாய பரம்பரை24-வது குரு மகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவான தேசிக பரமாச்சாரியசுவாமிகள், திருவாவடுதுறை ஆதின நெல்லை மண்டல மேலாளர் ராமச்சந்திரன் சுசீந்திரம் கிளைமட பொறுப்பாளர்எம் வி.நாதன்உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். மாலை6-30 மணிக்கு சாயரட்சை தீபாராதனையும் அதைத்தொடர்ந்து இரவு 7 மணிக்கு அம்மனுக்கு புஷ்பாபிஷேகமும் நடக்கிறது இரவு8-30மணிக்கு அம்மனை வெள்ளி பல்லக்கில் எழுந்தருளச் செய்து கோவிலின் உள் பிரகாரத்தை சுற்றி மேளதாளம் முழங்க3 முறை வலம் வரச் செய்யும் நிகழ்ச்சி நடக்கிறது.

    அதன்பிறகு வெள்ளி சிம்மாசனத்தில் அம்மனுக்கு தாலாட்டு நிகழ்ச்சியும் அதைத்தொடர்ந்து அத்தாழ பூஜையும் ஏகாந்த தீபாராதனையும் நடக்கிறது. இதேபோல நாளை முதல் 12-ந் தேதி வரை 12 நாட்கள் தொடர்ந்து காலை 10 மணிக்கு அம்மனுக்கு களப அபிஷேகம் நடக்கிறது. இந்த களப பூஜை நிறைவடைந்த பிறகு மறுநாள் 13-ந்தேதி காலை 10 மணிக்கு உதயாஸ்தமன பூஜை மற்றும் அதிவாசஹோமம் நடக்கிறது.

    இதற்கான ஏற்பாடுகளை கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகிறார்கள்.

    Next Story
    ×