search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பூச்சி அத்திப்பேடு ஊராட்சி மதுரை வீரன், முனீஸ்வரர், தேவி நாகாத்தம்மன் கோவிலில் தீமிதி திருவிழா
    X

    பூச்சி அத்திப்பேடு ஊராட்சி மதுரை வீரன், முனீஸ்வரர், தேவி நாகாத்தம்மன் கோவிலில் தீமிதி திருவிழா

    • ஸ்ரீசெல்லியம்மன் கோவிலிலிருந்து பால்காவடி அலங்கரிக்கப்பட்டு ஊர்வலமாக கோவிலை வந்தடைந்தது.
    • கோவிலுக்கு அருகே அமைக்கப்பட்டிருந்த தீ குண்டத்தில் பக்தர்கள் இறங்கி தீ மிதித்து நேர்த்திக் கடனை செலுத்தினர்.

    பெரியபாளையம்:

    திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம், பூச்சிஅத்திப்பேடு ஊராட்சியில் லட்சுமி அம்மன் கோவில் தெருவில் பிரசித்தி பெற்ற ஸ்ரீமதுரைவீரன், ஸ்ரீமுனீஸ்வரர் ஸ்ரீதேவி நாகாத்தம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் 10-ம் ஆண்டு தீமிதி திருவிழா நிகழ்ச்சி நேற்று இரவு நடைபெற்றது.

    இதை முன்னிட்டு கடந்த வெள்ளிக்கிழமை காலை ஸ்ரீசெல்லியம்மன் ஆலயத்தில் இருந்து கங்கை நீர், பால்குடம் எடுத்து வந்து அம்மனுக்கு பால் அபிஷேகம் செய்யப்பட்டது.

    மாலை பக்தர்களுக்கு காப்பு கட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. இரவு தேர் பவனி சக்தி கிரகம் ஊர்வலம் நடைபெற்றது. சனிக்கிழமை மதியம் கோவில் வளாகத்தில் கிராம பொதுமக்கள் சார்பாக அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.இரவு அக்கினிக்கப்பரை ஊர்வலம் நடைபெற்றது.

    நேற்று காலை ஸ்ரீசெல்லியம்மன் கோவிலிலிருந்து பால்காவடி அலங்கரிக்கப்பட்டு மேளதாளம் முழங்க ஊர்வலமாக கோவிலை வந்தடைந்தது. அதன் பின்னர், அம்மனுக்கு அபிஷேகம், அலங்காரம், தூப-தீப ஆராதனை உள்ளிட்டவை நடைபெற்றது. மாலை வேப்பம்பேடு கிராமம் ஸ்ரீசெல்லியம்மன் கோவிலிலிருந்து பூக்களாலும், மின்விளக்குகளாலும் அலங்கரிக்கப்பட்ட அம்மன் சென்று புனித நீராடிய பக்தர்களை கோவிலுக்கு அழைத்து வரும் நிகழ்ச்சி கொட்டும் மழையில் நடைபெற்றது.

    பின்னர், கோவிலுக்கு அருகே அமைக்கப்பட்டு இருந்த தீ குண்டத்தில் ஒருவர் பின், ஒருவராக இறங்கி தீ மிதித்து தங்களது நேர்த்தி கடனை செலுத்தினர். இதன் பின்னர், அனைத்து பக்தர்களுக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.

    இன்று காலை மஞ்சள் நீராட்டு விழா நிகழ்ச்சி நடைபெற்றது.மாலையில் சுமங்கலி பூஜை நடைபெறுகிறது. செவ்வாய்க்கிழமை காலை விடையாற்றி உற்சவம் நடைபெறுகிறது. இதில், சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை, நாகாத்தம்மன் கே.முரளி தலைமையில் பக்தர்கள், விழா குழுவினர் மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனர்.

    Next Story
    ×