search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அனுமதித்த நேரங்களில் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும்
    X

    அனுமதித்த நேரங்களில் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும்

    • மாவட்ட கலெக்டர் அம்ரித் தெரிவித்துள்ளாா்.
    • அனுமதிக்கப்பட்ட பட்டாசு வகைகளை மட்டுமே விற்பனை செய்ய வேண்டும்.

    ஊட்டி,

    நீலகிரியில் தடை செய்யப்பட்ட பட்டாசுகளை விற்பனை செய்யக் கூடாது என்று மாவட்ட கலெக்டர் அம்ரித் தெரிவித்துள்ளாா்.

    இதுதொடா்பாக அவா் கூறியிருப்பதாவது: -

    ஒளித்திருநாளாம் தீபாவளி பண்டிகை அனைவரும் கொண்டாடி மகிழும் முக்கிய திருநாளாகும். இந்த நாளில் வண்ணவண்ண மத்தாப்புகளை கொளுத்தி மகிழும் வழக்கம் உள்ளது. நாம் கொளுத்தி மகிழும் மத்தாப்புகளுடன், ஒலி எழுப்பும் பட்டாசுகளால் ஒலி மாசு ஏற்படவும், நம் காதுகளின் கேட்கும் திறன் குறையவும் வாய்ப்பு உள்ளது. அதேபோல, பட்டாசுகளை வெடிக்கும்போது வெளியாகும் புகையால், காற்று மாசு ஏற்படவும், விபத்துகள் நேரவும் வாய்ப்புள்ளது.

    நீலகிரி மாவட்டத்தை பொறுத்தவரை, மொத்த மாவட்டமும் உயிா்கோளப் பகுதி என வரையறுக்கப்பட்ட மிக மென்மையான சூழலை கொண்டப் பகுதியாகும். பல்வேறு வகையான வனவிலங்குகளுக்கும், அரியவகை தாவரங்களுக்கும் வாழ்விடமாக உள்ளது.

    இச்சூழலில், பட்டாசுகள் வெடிப்பதால் காற்று மற்றும் ஒலி மாசு ஏற்படின், அது மாவட்டத்தின் மென்மையான சூழலுக்கும், வனவிலங்குகளுக்கும் ஊறு விளைவிப்பதாக அமையும். எனவே, அவற்றைத் தவிா்த்து, வனங்களில் காணப்படும் விலங்குகளையும், அரியவகை தாவரங்களையும் பாதுகாக்க வேண்டிய பொறுப்பும், கடமையும் மாவட்ட மக்களாகிய அனைவருக்கும் உள்ளது.

    மேலும், சுப்ரீம் கோர்ட்டு பிறப்பித்துள்ள உத்தரவின்படி, தீபாவளியன்று 2 மணி நேரம் மட்டுமே பட்டாசுகள் வெடிக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. இதன்படி, தமிழ்நாட்டில் காலை 6 மணி முதல் 7 மணி வரை, இரவு 7 மணி முதல் 8 மணி வரை மட்டுமே பட்டாசுகள் வெடிக்க அனுமதிக்கப்படும். எனவே, பொதுமக்கள் தீபாவளியன்று அனுமதிக்கப்பட்ட நேரங்களில் மட்டுமே பட்டாசுகளை வெடிக்கும்படியும், அதிக ஓசை எழுப்பக்கூடிய தடைசெய்யப்பட்ட பட்டாசுகளை வெடிக்க வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்படுகிறது. இதை மீறுவோா் மீது காவல் துறையினா் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்வா்.

    இதுபோன்றே, பட்டாசு விற்பனையாளா்களும் அனுமதிக்கப்பட்ட பட்டாசு வகைகளை மட்டுமே விற்பனை செய்ய வேண்டும். தடைசெய்யப்பட்ட பட்டாசுகளை எக்காரணம் கொண்டும் விற்பனை செய்யக்கூடாது. மீறும் விற்பனையாளா்களின் விற்பனை உரிமம் ரத்து செய்யப்படுவது மட்டுமின்றி, அபராதமும் விதிக்கப்படும் .

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×