என் மலர்
உள்ளூர் செய்திகள்

கேளம்பாக்கம் அருகே ஜெராக்ஸ் கடையில் தீப்பிடித்து இளம்பெண் பலி
- ஜெராக்ஸ் கடையில் தீப்பற்றியது. இதில் சுகன்யா சிக்கி அலறினார்.
- தீ விபத்துக்கான காரணம் குறித்து கேளம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கேளம்பாக்கம் அருகே உள்ள புதுப்பாக்கம், காஸ்மோசிட்டி பகுதியில் ஜெராக்ஸ் கடை நடத்தி வருபவர் சுகன்யா(வயது38). இவரது கணவர் மலேசியாவில் வேலைபார்த்து வருகிறார். இவர்களுக்கு 2 பெண்குழந்தைகள் உள்ளனர். இவர்களது சொந்த ஊர் தஞ்சாவூர் ஆகும்.
நேற்று காலை வழக்கம் போல் சுகன்யா கடையில் இருந்தார். அப்போது திடீரென ஜெராக்ஸ் கடையில் தீப்பற்றியது. இதில் சுகன்யா சிக்கி அலறினார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அதே பகுதியை சேர்ந்த அருண், லெனின் ஆகியோர் சுகன்யாவை மீட்க முயன்றனர்.
இதில் அவர்கள் 3 பேரும் தீயில் கருகினர். பலத்த தீக்காயம் அடைந்த சுகன்யாவை மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில் இன்று காலை சிகிச்சை பலனின்றி சுகன்யா பரிதாபமாக இறந்தார். மற்ற 2 பேருக்கும் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தீவிபத்துக்கான காரணம் குறித்து கேளம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.






