என் மலர்
உள்ளூர் செய்திகள்

குழந்தைகளுக்கான ஆதார் மையம் தொடர்ந்து செயல்பட பெற்றோர்கள் கோரிக்கை
திருப்பூர்:
திருப்பூர் கலெக்டர் அலுவலகம், மாநகராட்சி அலுவலகம், தாலுகா அலுவலகத்தில் ஆதார் மையம் செயல்பட்ட போதும் குழந்தைகளை அழைத்து வரும் பெற்றோர் வசதிக்காக கே.எஸ்.சி., அரசு மேல்நிலைப்பள்ளியில் பிரத்யேக ஆதார் மையம் செயல்பட்டது.
இங்கு ஒன்று முதல் ஐந்து வயது வரையுள்ள குழந்தைகளுக்கு டோக்கன் வழங்கி ஆதார் எடுக்கப்பட்டது.நாள் ஒன்றுக்கு 100 பேர் வீதம் பெற்றோர் கைரேகை ஒப்புதலுடன் குழந்தைகளுக்கு போட்டோ எடுத்து ஆதார் அட்டையும் வழங்கப்பட்டதால் பெற்றோர் பலர் இங்கு வந்து பயன்பெற்றனர்.
இந்நிலையில் பள்ளிக்கு விடுமுறை விடப்பட்டதால் ஆதார் மையம் மூடப்பட்டுள்ளது. பள்ளி வாயிலில், பள்ளி திறக்கும் வரை ஆதார் மையம் தற்காலிகமாக செயல்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
திருப்பூரில் குழந்தைகளுக்கு பிரத்யேக ஆதார் எடுக்க இந்த ஒரு மையம் மட்டுமே செயல்படுகிறது. பிற மையங்களுக்கு சென்றால் கே.எஸ்.சி., பள்ளிக்கு செல்லுங்கள் என அனுப்பி விடுகின்றனர். எனவே இந்த மையம்தொடர்ந்து செயல்பட வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






