என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்
ரங்கசாமி ராஜினாமா செய்தால் மட்டுமே புதுச்சேரியை பாதுகாக்க முடியும்- நாராயணசாமி பேட்டி
நாள்தோறும் கொலை- கொள்ளை- அபகரிப்பதால் முதல்-அமைச்சர் ரங்கசாமி பதவி விலகினால்தான்புதுவையை பாதுகாக்க முடியும் நாராயணசாமி பேசினார்.
புதுச்சேரி:
புதுவை முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-
மோடியின் சென்னை வருகை யின்போது தமிழக முதல்-அமைச்சர் ஸ்டாலின் பல்வேறு கோரிக்கைகளை மேடையில் முன்வைத்து பேசினார். வழக்கமாக மாநில முதல்- அமைச்சர்கள் பிரதமரிடம் கோரிக்கை வைப்பது வழக்கம்தான். இதனை பா. ஜனதாவினர் பிரதமரை கொச்சைப்படுத்தியதாக கூறி விமர்சித்து வருகின்றனர்.
பிரதமர் சர்வாதிகாரி போலும், அவர் பங்கேற்கும் விழாவில் முதல்-அமைச்சர் எதுவும் கேட்கக்கூடாது என்றும் பா.ஜனதாவினர் கருதுகின்றனர். இது பா.ஜனதாவின் அரைவேக்காடு அரசியலைத்தான் காட்டுகிறது. மக்களால் தேர்வு செய்யப்பட்ட முதல்-அமைச்சர் மக்களின் எண்ணங்களை பிரதி பலிக்கத்தான் செய்வார்.
புதுவை மின்துறையை தனியார்மயமாக்க மத்திய அரசுக்கு ஒப்புதல் அளித்து முதல்-அமைச்சர் ரங்கசாமி கோப்பு அனுப்பியுள்ளார் என்பது உறுதியாகியுள்ளது. மின்ஊழியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். மதச்சார்பற்ற கட்சிகள் ஒருங்கிணைந்து போராட்டம் நடத்த உள்ளோம். மின்துறையை தனியார்மயமாக்கி னால் ஊழியர்கள் மட்டுமின்றி, பொதுமக்களும் பாதிக்கப்படுவர்.
தனியார்மயம் குறித்த கேள்விக்கு ரங்கசாமி மழுப்பலான பதிலை கூறியுள்ளார். கடந்தமுறை போராட்டத்தின்போது ஊழியர்கள், பொதுமக்கள் கருத்தை கேட்காமல் எந்த முடிவும் எடுக்கமாட்டோம் என முதல்-அமைச்சர் அளித்த வாக்குறுதி என்ன ஆச்சு? இதன்மூலம் முதல்-அமைச்சர் எவ்வளவு பலவீனமாக உள்ளார் என தெரியவருகிறது. மின்துறை தனியார்மயம் குறித்து கூட்டணி கட்சிகளோடு கலந்து பேசி கோர்ட்டுக்கு செல்வோம்.
ஸ்மார்ட் சிட்டி திட்டம் காலதாமதமாக செயல்படுத்தப்படுகிறது என ரங்கசாமி கூறியுள்ளார். 2011 முதல் 2016 வரை ரங்கசாமி முதல்-அமைச்சராக இருந்தபோதே திட்டம் நடைமுறைக்கு வந்திருக்க வேண்டும். ஆனால் என்.ஆர். காங்கிரஸ் அரசின் தெளிவற்ற முடிவால் காலதாமதமானது. காங்கிரஸ் ஆட்சியில் கவர்னர் கிரண்பேடியின் இடையூறுகளால் காலதாமம் ஆனது. ரங்கசாமி ஊழல் முதல்-அமைச்சர் என கூறிய கிரண்பேடிக்கு ரங்கசாமி ஆதரவு அளித்தார்.
என்.ஆர். காங்கிரஸ், பா.ஜனதா தேர்தல் அறிக்கையில் பஞ்சாலைகளை திறப்போம், கூட்டுறவு நூற்பாலைகளை திறப்போம் என பல வாக்குறுதிகளை அளித்தனர். பஞ்சாலைகளை மூட அரசு முயற்சித்து வருகிறது. இத்தகைய அவலமான ஆட்சி நடக்கிறது. ரங்கசாமி முதல்-அமைச்சர் ஆகும்போதெல்லாம் புதுவை கொலை நகரமாகும். ரவுடிகள் அட்டகாசம் தலைவிரித்தாடும்.
தற்போது மீண்டும் புதுவையில் கொலை, கொள்ளை, வழிப்பறி, திருட்டு, வீடு, நிலம் அபகரிப்பு, போதைப்பொருள் விற்பனை அனைத்தும் சர்வசாதாரணமாக நடந்து வருகிறது.
காவல்துறையை முதல்-அமைச்சரால் கட்டுப்படுத்த முடியவில்லை. மக்களுக்கு பாதுகாப்பற்ற நிலை உருவாகியுள்ளது. நிதி பற்றாக்குறை, சம்பளமின்மை, மத்திய அரசிடம் நிதி பெற திறமையின்மை ஆகியவற்றால் பொம்மை ஆட்சி நடக்கிறது. மீண்டும் சிறையிலிருந்து தொழிலதிபர்கள், வியாபாரிகளை மிரட்டி பணம் வசூலிக்கப்படுகிறது. ரங்கசாமி பதவி விலகினால்தான் புதுவை மக்கள் பாதுகாப்பாக வாழ முடியும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Next Story






