என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புப்படம்.
    X
    கோப்புப்படம்.

    பள்ளி நேரத்தில் கனரக வாகனங்கள் செல்ல தடை விதிக்க விழுதுகள் இயக்கம் கோரிக்கை

    சீர்காழி நகரில் பள்ளி நேரத்தில் கனரக வாகனங்கள் செல்ல தடைவிதிக்க வேண்டும் என விழுதுகள் இயக்கம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    சீர்காழி:

    தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளும் வரும் ஜுன் 13-ந் தேதி திறக்கப்பட உள்ளது. இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி நகரில் பள்ளி மாணவ- மாணவிகள் மற்றும் மக்கள் நடமாட்டம் அதிகமாக உள்ள நேரத்தில் கனரக வாகனங்கள் செல்ல தடை விதிக்க வேண்டும் என்று விழுதுகள் இயக்கத்தின் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    இது குறித்து விழுதுகள் இயக்கத் தலைவர் ஏ.கே.ஷரவணன் கூறும்போது:-

    சீர்காழி நகரில் ஏராளமான பள்ளிகளும், ஒரு கல்லூரியும் உள்ளது. ஏற்கனவே சாலைகள் குறுகிய அளவில் இருப்பதாலும், சாலையோர ஆக்கிரமிப்பு போன்றவற்றால் சாதாரணமாகவே போக்குவரத்து நெரிசல் இருக்கும். இந்த நிலையில் பள்ளி நேரத்தில் கனரக வாகனங்கள் செல்வதால் மாணவர்களுக்கு பெரும் இடையூறாக இருப்பதோடு மட்டுமின்றி, விபத்துக்களை ஏற்படுத்துவதை தவிர்க்கவும் பள்ளி தொடங்கும் போதும், மாலை பள்ளி முடிந்து மாணவர்கள் வீட்டிற்கு செல்லும் நேரங்களில் சீர்காழி நகரில் கனரக வாகனங்கள் இயக்க தடை விதிக்க வேண்டும்.

    அதன்படி காலை 7 மணி முதல் 10 மணி வரையும், பிற்பகல் 3 மணி முதல் 9 மணி வரை சீர்காழி சட்டை நாதபுரம் ரவுண்டானா முதல் விளந்திடசமுத்திரம் வரையும், ஈசானிய தெரு முதல் சீர்காழி பனங்காட்டான்குடி புறவழி சாலை சந்திப்பு வரையும் கனரக வாகனங்கள் செல்ல தடை விதிக்க வேண்டும்.

    மேலும் தற்போது மணல் எடுக்க அரசு அனுமதி வழங்கியுள்ள நிலையில் சித்தமல்லி மணல் குவாரியிலிருந்து ரெயில்வே ரோடு வழியாக சீர்காழி நகருக்கு வரும் மணல் லாரிகள் உள்பட அனைத்து வாகனங்களையும் சீர்காழி தாடாளன்மேலவீதி, தாடாளன்வடக்குவீதி, தாடாளன்கீழவீதி வழியாக செல்லவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதனால் கொள்ளிட முக்கூட்டு பகுதியில் போக்குவரத்து நெரிசலை குறைக்க முடியும் என்றார்.
    Next Story
    ×