என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்.
குவாரியிலிருந்து இரவில் மணல் அள்ளி சென்ற லாரிகள் சிறைபிடிப்பு
சீர்காழி அருகே குவாரியிலிருந்து இரவில் மணல் அள்ளி சென்ற லாரிகளை கிராமமக்கள் சிறைபிடித்தனர்
சீர்காழி:
சீர்காழி அருகே கொள்ளிடம் ஆறு குன்னம் மற்றும் பாலூரான்படுகை பகுதிகளில் அரசு மணல் குவாரி இயங்கி வருகிறது. இங்கு ஆன்லைன் புக்கிங் முறையில் லாரிகளுக்கு தினந்தோறும் மணல் ஏற்றப்பட்டு அனுப்பி வைக்கப்படுகிறது. நீண்ட கோரிக்கைக்கு பிறகு கடந்த சில வாரங்களாக டிராக்டர்களிலும் மணல் அள்ள அனுமதிக்கப்பட்டு அள்ளப்படுகிறது.
இதனிடையே மாலை 6 மணிவரை மட்டும் குவாரிகளிலிருந்து மணல் எடுத்து செல்ல வேண்டும் என நேரம் நிர்ணயம் செய்யப்பட்டு வரையறுக்கப்பட்டுள்ளது. இரவு 9 மணிவரை மணல் லாரிகள் மணல் எடுத்து சென்று வருவதால் சென்னியநல்லூர் பகுதி கிராமமக்கள் அதிருப்தியடைந்தனர்.
இந்நிலையில் சம்பவத்தன்று இரவு 8 மணியளவில் குவாரியிலிருந்து மணல் ஏற்றி சென்ற லாரிகளை பாஜக ஒன்றிய தலைவர் நேதாஜி தலைமையில் கிராமமக்கள் சிலர் சிறைபிடித்து கோஷங்கள் எழுப்பினர்.
பின்னர் லாரி ஓட்டுனர்களிடம் பொதுமக்களுக்கு இரவு நேரங்களில் தொந்தரவு ஏற்படுத்தும் வகையில் மணல் ஏற்றி செல்லக்கூடாது என அறிவுறுத்தி விடுவித்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் அரைமணிநேரம் பரபரப்பு நிலவியது.
Next Story






