என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்
23-ந் தேதி மின்துறை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
யூனியன் பிரதேசங்களில் உள்ள மின்துறையை தனியார்மயமாக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
புதுச்சேரி:
புதுவை மாநிலத்தில் அரசின் மின்துறையை தனியார் மயமாக்கும் பூர்வாங்க நடவடிக்கைகளை மத்திய அரசு தொடங்கியது. இதை கண்டித்து புதுவை மின்துறை பொறியாளர்கள், ஊழியர்கள் இணைந்து தனியார்மய எதிர்ப்பு போராட்டக்குழுவை உருவாக்கி போராட்டம் நடத்த தொடங்கினர்.
ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் மின்துறையை தனியார் மயமாக்குவது தொடர்பாக விவாதிக்கப்பட்டது. இதில் மின்துறை பொறியாளர்கள், ஊழியர்களுடன் மின்துறை செயலர் மூலம் சாதக, பாதக கருத்துக்களை கேட்டறிவது என முடிவு செய்யப்பட்டது.
ஆனால் கூட்டத்தை மின்துறை ஊழியர்கள் புறக்கணித்தனர். கடந்த ஜனவரியில் மின்துறை தனியார்மயம் மற்றும் பணிபாதுகாப்பு பற்றி கருத்து கேட்பு கூட்டம் நடந்தது. அதில் மின்துறை தனியார்மயத்தால் மக்களுக்கும், ஊழியர்களுக்கும் பாதிப்பு ஏற்படாது என விளக்கம் தரப்பட்டது.
இதை ஏற்க மறுத்து பிப்ரவரி 1, 2-ந் தேதிகளில் மின்துறை தனியார்மய எதிர்ப்பு போராட்டக்குழுவினர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களுடன் முதல்- அமைச்சர் ரங்கசாமி பேச்சுவார்த்தை ந டத்தி, ஊழியர்களிடம் கலந்து ஆலோசிக்காமல் எந்த முடிவையும் எடுக்கமாட்டோம் என உறுதியளித்தார்.
இதைத்தொடர்ந்து போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. இந்நிலையில் அரசு தற்போது தனியார்மயத்துக்கான பணிகளை தொடங்கியுள்ளது.
இதையடுத்து மின்துறை பொறியாளர்கள்-தொழிலாளர்கள் தனியார் மய எதிர்ப்பு போராட்டக்குழு பொதுச்செயலர் வேல்முருகன் தலைமையில் மின்துறை ஊழியர்கள் ஆலோசனைக்கூட்டம் நடத்தினர்.
இந்த கூட்டத்தில், தனியார் மயத்தை கண்டித்தும், முதல்-அமைச்சர், மின்துறை அமைச்சரை கண்டித்தும் வரும் 23-ந் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது, அதைத்தொடர்ந்து அடுத்த கட்ட போராட்டத்தை அறிவிப்பது என முடிவு செய்துள்ளனர்.
Next Story






