search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கொள்ளை
    X
    கொள்ளை

    கடலூர் தாழங்குடாவில் மீனவர் வீட்டில் கொள்ளை

    கடலூர் தாழங்குடாவில் மீனவர் வீட்டில் பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    கடலூர்:

    கடலூர் தேவனாம்பட்டினம் போலீஸ் சரகம் தாழங்குடா மீனவ கிராமத்தை சேர்ந்தவர் வீரமணி. மீனவர். இவர் தற்போது வெளிநாட்டில் வேலைபார்த்து வருகிறார். அவரது மனைவி சோனியா தனியாக வசித்து வருகிறார்.

    கடந்த 11ந் தேதி சோனியாவுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. எனவே சிகிச்சைக்காக புதுவையில் உள்ள ஆஸ்பத்திரிக்கு சோனியா சென்றார். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திய மர்ம நபர்கள் மீனவர்வீட்டின் பின்பக்க கதவை உடைத்து உள்ளே சென்றனர். பின்னர் அங்கிருந்த பொருட்களை கொள்ளையடித்து சென்றனர்.

    மாலை நேரம் சோனியா வீடு திரும்பினார். கதவை திறந்து பார்த்தபோது பின்பக்க கதவு உடைந்திருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். பீரோவும் உடைக்கப்பட்டிருந்தது. அதில் இருந்த வெள்ளி பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது.

    மேலும் வீட்டில் இருந்த டெலிவிசனை கொள்ளையர்கள் திருடி சென்றதோடு வீட்டில் இருந்த ஆதார் கார்டு, ரேசன் கார்டு ஆகியவற்றை கிழித்து எறிந்துள்ளனர்.

    இதுகுறித்து சோனியா தேவனாம்பட்டினம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குபதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர். கொள்ளையர்கள் பற்றி துப்புதுலக்க மோப்பநாய் வரவழைக்கப்பட்டது. அது வீட்டில் இருந்து சிறிது தூரம் ஓடி நின்றது.

    தடயவியல் நிபுணர்களும் ரேகைகளை பதிவு செய்து கொள்ளையர்கள் பற்றி துப்பு துலக்கி வருகிறார்கள்.
    Next Story
    ×