என் மலர்
உள்ளூர் செய்திகள்

முதல்-அமைச்சர் ரங்கசாமியிடம் சம்பத் எம்.எல்.ஏ. மனு அளித்த காட்சி.
திருநங்கைகளுக்கு கடனுதவி-சம்பத் எம்.எல்.ஏ.மனு
திருநங்கைகளுக்கு சுய தொழில் தொடங்க கடனுதவி வழங்க வேண்டும் ரங்கசாமியிடம் சம்பத் எம்.எல்.ஏ.மனு அளித்துள்ளார்.
புதுச்சேரி:
முதலியார் பேட்டை தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ சம்பத் முதல்-அமைச்சர் ரங்கசாமியை சந்தித்து அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-
திருநங்கையாக படைக்கப்பட்டதால் இவர்கள் படும் இன்னல் எண்ணிலடங்காதவை. பள்ளிப்படிப்பு பருவத்திலேயே இவர்களுக்கு பாலியல் மாற்றம் ஏற்படுவதால் பள்ளிப் படிப்பை முடிக்க முடியாமல் பாதியிலேயே இவர்களின் கல்வி கனவு தவிர்க்கப்படுகின்றது. வீட்டை விட்டு துரத்தி அடிக்க படுகின்றனர்.
இவர்களின் பாலியல் பிரச்சினையால் சாதாரண வேலைவாய்ப்புகள் கூட இவர்களுக்கு மறுக்கப்படுகின்றது. தங்குவதற்கு பாதுகாப்பான இடம் இல்லை.
இவர்களில் பல பாலியல் துன்பத்திற்கு ஆளாக்க பட்டு பாலியல் தொழிலிலும் ஈடுபட தள்ளப்படுகின்றனர்.
இதனால் பொதுமக்கள் மத்தியில் இவர்களுக்கு கெட்ட பெயர்களே அதிகம் ஏற்படுகின்றது. மகளிர் சுய உதவிக் குழுக்கள் உள்ளது போன்று ஊரக வளர்ச்சி முகமை மூலம் திருநங்கைகள் குழு அமைக்கப்பட்டுள்ளது.
ஆனால் மகளிருக்கு வழங்கப்படும் கடனுதவி போல இவர்களுக்கு கடனுதவி வழங்கப்படுவது இல்லை. எனவே இவர்களுக்கு சுயதொழில் புரிய தேவையான சிறு கடன் உதவிகளை நகராட்சி நிர்வாகங்கள் மூலம் வங்கிகளில் ஏற்பாடு செய்ய தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறியுள்ளார்.
Next Story






