என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்.
நேரு எம்.எல்.ஏ. திடீர் போராட்டம்
உருளையன்பேட்டை தொகுதி நேரு எம்.எல்.ஏ. திடீர் போராட்டத்தில் ஈடுபட்டார்.
புதுச்சேரி:
புதுவை கண்டாக்டர் தோட்டம் அருகில் உள்ள அரசு புறம்போக்கு இடம் அருகில் அரசு பள்ளி கட்டிடம் உள்ளது. இந்த கட்டிடம் 2011-ம் ஆண்டு திறக்கப்பட்டது. அப்பகுதி குடியிருப்பு மக்களும், மாணவர்களும் வந்து செல்ல 10 அடி பாதை மட்டுமே இருந்தது. இதுகுறித்து பள்ளி சார்பில் கல்வித்துறைக்கு தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து குடிசை மாற்று வாரியம் மூலம் கல்வித்துறைக்கு அந்த இடம் கொடுக்கப்பட்டது. ஆனால், அதற்கு அடுத்து ஆட்சி மாற்றம் வந்ததால் அந்த இடம் பள்ளிக்கு கொடுக்கப்படவில்லை.அந்த இடத்தில் 5 மாடி கட்டிடம் கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டது. அந்த கட்டிடத்திற்கு எந்த உரிமமும் பெறவில்லை. அப்பகுதி மக்கள் போராட்டம் நடத்தியதன் அடிப்படையில் 2022-ல் நகர அமைப்பு குழுமம் கட்டிடம் கட்ட அனுமதி மறுத்தது.
இந்த நிலையில் கடந்த 20 நாட்களாக அந்த கட்டிடம் கட்டும் பணிகள் நடைபெற்று வருகிறது. இது குறித்து அறிந்த அப்பகுதி மக்கள் தொகுதி நேரு எம்.எல்.ஏ. தலைமையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து நகர அமைப்பு குழும அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து நேரு எம்.எல்.ஏ. மற்றும் பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். புதிதாக கட்டப்பட்டு வரும் கட்டிடத்தின் மின்சாரம் மற்றும் தண்ணீர் இணைப்புகள் துண்டிக்கப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்தனர்.
இதன் பிறகு நேரு எம்.எல்.ஏ. மற்றும் பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Next Story






