என் மலர்
உள்ளூர் செய்திகள்

போக்குவரத்துறை அமைச்சர் சந்திரபிரியங்காவிடம் சம்பத் எம்.எல்.ஏ. மனு அளித்தார்.
இருசக்கர வாடகையை முறைப்படுத்த வேண்டும்: சம்பத் எம்.எல்.ஏ. கோரிக்கை
இருசக்கர வாகன வாடகையை முறைப்படுத்த வேண்டும் என்று அமைச்சரிடம் சம்பத் எம்.எல்.ஏ. கோரிக்கை மனு அளித்தார்.
புதுச்சேரி:
புதுவையில் இருசக்கர வாகனங்கள் வாடகை விடுவதில் அதிக கட்டணம் வசூலிப்பதை முறைப்படுத்த வேண்டும் என அமைச்சர் சந்திரபிரியங்காவிடம், சம்பத் எம்.எல்.ஏ. கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-
புதுவை வருவாயில் சுற்றுலாத்துறை முக்கிய அங்கம் வகிக்கிறது. புதுவைக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது.
புதுவையில் பல்வேறு இடங்களை சுற்றிப் பார்ப்பதற்கு இரு சக்கர வாகனங்களை சுற்றுலா பயணிகள் நாடி வருகின்றனர். இதனால் இரு சக்கர வாகனங்களை வாடகைக்கு விடுபவர்கள் உரிய ஆவணங்களை பெறாமல் அதிக வாடகைக்கு விடுகின்றனர்.
இதனை பயன்படுத்தி வெளியூர் சுற்றுலா பயணிகள் பலர் ஒரு சில சட்ட விரோத செயல்களிலும் ஈடுபடுகின்றனர்.
வாடகைக்கு விடும் இரு சக்கர வாகனங்கள், பொதுமக்கள் பயன்படுத்தும் வாகனங்களின் நம்பர் பிளேட்டுகள் ஒரே வண்ணத்தில் இருப்பதால் ஒரு சில சுற்றுலா பயணிகளின் சமூக விரோத செயல்களை போலீசாரால் கண்காணிக்க முடியவில்லை.
எனவே, கோவா உள்ளிட்ட சுற்றுலா நகரங்களில் வாடகைக்கு விடப்படும் இரு சக்கர வாகனங்களில் மஞ்சள் நிற எழுத்துக்களால் நம்பர் பிளேட் உள்ளதை போல் புதுவையிலும் அதனை நடைமுறைப்படுத்த வேண்டும். இதனை போக்குவரத்து துறை மூலம் ஒழுங்குபடுத்த வேண்டும்.
இதனால் புதுவை அரசுக்கும் வருவாய் கிடைப்பது மட்டுமல்லாமல் வெளியூரில் இருந்து புதுவை வரும் சுற்றுலா பயணிகளின் உள்ளூர் பயணம் எளிமை-யாகவும், பாதுகாப்பாகவும் அமையும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Next Story






