என் மலர்
உள்ளூர் செய்திகள்

புதுவை-விழுப்புரம் சாலையில் வியாபாரிகள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட காட்சி.
கழிவு நீரை அகற்றகோரி வியாபாரிகள் திடீர் சாலை மறியல்
கழிவு நீரை அகற்ற கோரி மதகடிப்பட்டில் வியாபாரிகள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
புதுச்சேரி:
விழுப்புரம்-நாகப்பட்டினம் 4 வழி சாலை விரிவாக்கப் பணி தற்போது நடைபெற்று வருகிறது. இந்த சாலை விரிவாக்க பணிக்காக மதகடிப்பட்டு கடைவீதியில் பொக்லைன் எந்திரம் மூலம் கடையின் எதிரே சுமார் கிலோமீட்டர் தூரம் பள்ளம் தோண்டப்பட்டது.
இதனால் சாலை ஓரத்தில் இருந்த கழிவுநீர் வாய்க்கால் அகற்றப்பட்டது. புதிய கழிவுநீர் வாய்க்கால் கடந்த 2 மாதம் கடந்தும் கட்டப் படவில்லை. இதனால் வீடுகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீர் அனைத்தும் கடைகளின் எதிரே தேங்கி நிற்கின்றன. இதனால் பொதுமக்கள் கடைக்கு பொருட்கள் வாங்க வருவது குறைந்ததால் வியாபாரிகள் பாதிக்கப்பட்டனர்.
மேலும் கழிவுநீர் தேங்கி நிற்பதால் துர்நாற்றம் வீசி நோய்த்தொற்று பரவும் நிலை உள்ளது. கழிவுநீரை அகற்றக்கோரி வியாபாரிகள் பலமுறை அதிகாரிகளிடம் தெரிவித்தும் இதுநாள் வரை கழிவுநீர் அகற்றப்படவில்லை. இதனால் ஆவேசம் அடைந்த வியாபாரிகள் இன்று காலை விழுப்புரம் - புதுவை தேசிய நெடுஞ்சாலையில் மதகடிப்பட்டு பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இது பற்றி தகவலறிந்த திருபுவனை போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார், சப்-இன்ஸ்பெக்டர் குமரவேல் மற்றும் போலீசார் மறியலில் ஈடுபட்ட வியாபாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதிகாரிகளுக்கு இதுபற்றி தெரிவித்து உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் உறுதியளித்தனர்.
இதனை ஏற்று வியாபாரிகள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த திடீர் சாலை மறியலால் அப்பகுதியில் சுமார் மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Next Story






