
அரியலூர் அடுத்த அஸ்தினாபுரம் கிராமத்திலுள்ள முருகன் கோயிலில் தேரோட்டம் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.
இக்கிராமத்தில் 23 அடி உயரமுள்ள முருகன் சிலை உள்ளது. இக்கோயிலில் ஆண்டு தோறும் சித்திரை மாதம் பௌர்ணமி அன்று தேர்ரோட்டம் நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம்.
அதன்படி நிகழாண்டு கோயில் திருவிழா கடந்த 8ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி, பல்வேறு வாகனங்களில் சுவாமி திருவீதியுலா நடைபெற்று வருகிறது.
விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் சனிக்கிழமை சித்ரா பௌர்ணமி அன்று காலை நடைபெற்றது. முன்னதாக வள்ள, தெய்வாணை சமேத முருகன் மற்றும் விநாயகருக்கு பால், தயிர், இளநீர், பஞ்சாமிர்தம், பன்னீர் , திரவியப் பொடி,
தேன் உள்ளிட்ட 16 வகை பொருள்களால் அபிஷேகம் நடத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து வஸ்திரம் சாத்தப்பட்டு வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட சுவாமிகள் திருத்தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்புரிந்தனர்.
தேர் அஸ்தினாபுரம் கிராமத்தை சுற்றி நிலையை அடைந்தது. சுற்றுவட்டார கிராம மக்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்து தரிசனம் செய்தனர்.