search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அமிர்தகடேஸ்வரர் கோவில் கொடியேற்றம்.
    X
    அமிர்தகடேஸ்வரர் கோவில் கொடியேற்றம்.

    அமிர்தகடேஸ்வரர் கோவிலில் சித்திரை திருவிழா கொடியேற்றம்

    திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுக்கா, திருக்கடையூரில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான தேவாரப்பாடல் பெற்ற அபிராமி உடனாகிய அமிர்த கடேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது.

    மார்க்கண்டேயனுக்காக சுவாமி காலசம்ஹார மூர்த்தியாக எழுந்தருளி எமனை வதம் செய்ததால் இத்தலம் அட்டவீரட்டத் தலங்களில் ஒன்றாக விளங்கி வருகிறது. இத்தகைய சிறப்பு பெற்ற கோயிலின் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    ஆண்டுதோறும் 14 நாட்கள் நடைபெறும் சித்திரை திருவிழாவின் முதல் நாளான நேற்று அபிராமி சமேத அமிர்த கடேஸ்வரர் பஞ்ச மூர்த்திகளுடன் சிறப்பு அலங்காரத்தில் பல்லக்கில் வந்து கொடிமரம் அருகில் எழுந்தருளினார். இதனையடுத்து மங்கள வாத்தியங்கள் மற்றும் அதிர்வேட்டுகள் முழங்க, கனேச குருக்கள் மற்றும் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் ஓத சித்திரை திருவிழா பஞ்சமுக கொடி ஏற்றப்பட்டது.

    தொடர்ந்து கொடி மரங்களுக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. தருமபுரம் ஆதீனம் கட்டளை ஸ்ரீமத் சிவகுருநாத தம்பிரான் சுவாமிகள் முன்னிலையில் நடைபெற்ற சித்திரை திருவிழா கொடியேற்றும் நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்துக்கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக வருகின்ற 9-ம் தேதி மாலை திருக்கல்யாணமும், 12-ம் தேதி இரவு எமன் சம்காரமும், 14-ம் தேதி காலை 8 மணிக்கு தேரோட்ட திருவிழாவும் நடைபெறுகிறது.
    Next Story
    ×