என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஸ்மார்ட் சிட்டி அதிகாரிகளுடன் கென்னடி எம்.எல்.ஏ. ஆலோசனை நடத்திய காட்சி.
உப்பளம் தொகுதியில் ஸ்மார்ட்சிட்டி திட்டத்தில் தாமதம்- கென்னடி எம்.எல்.ஏ. குற்றச்சாட்டு
உப்பளம் தொகுதியில் ஸ்மார்ட்சிட்டி திட்டத்தில் தாமதம் ஏற்பட்டதாக கென்னடி எம்.எல்.ஏ. குற்றச்சாட்டி உள்ளார்.
புதுச்சேரி:
புதுவை உப்பளம் தொகுதி எம்.எல்.ஏ அனிபால் கென்னடி ஸ்மார்ட் சிட்டி திட்ட இணைதலைமை செயல் அதிகாரி மாணிக்கதீபன் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது அவர் பேசிய தாவது:-
உப்பளம் தொகுதி முழுவதும் ஸ்மார்ட் திட்டங்கள் முழுமையாக கொண்டு வரப்படாமல் இருப்பதும் முழுமையாக மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படவில்லை என்பதும் வருத்தத்திற்குறியது.
உப்பளம் தொகுதிக்குட்பட்ட ஆட்டுப்பட்டி அடுக்குமாடி குடியிருப்பு சம்மந்தமாக முன்பே கோப்புகள் அனுப்பப்பட்டு இருந்தது. அதன் நிலைப்பாடு குறித்து அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. அங்கு வசிக்கும் மக்கள் மிகவும் கஷ்டமான சூழலில் இயற்கையை எதிர்த்து போராடி வருகின்றனர். ஸ்மார்ட் சிட்டி முழுமையடைய வேண்டும் என்றால் அங்கு வசிக்கும் அனைவருக்கும் அரசால் அடுக்குமாடி குடியிருப்பு கட்டி தருவதன் மூலம்தான் அந்த பெயர் அரசுக்கும், அதிரிகாரிகளுக்கும் சென்று அடையும்.
உப்பளம் தொகுதியில் யூ. நீர்க்கால் மற்றும் எல்.நீர்க்கால் இதுவரை ஸ்மார்ட் சிட்டி மூலம் சீர்செய்யப்படவில்லை. படகுகளில் தொழில் செய்யும் மக்களுக்கு சாலை, வலைகூடம் அமைத்து தண்ணீர், மின்விளக்கு வசதிகள் ஏற்படுத்தி தரவேண்டும்.
பாண்டி மெரினாவில் சுனாமி நினைவு சின்னம் கட்டாயம் அமைத்து தரவேண்டும். வீராம்பட்டினம் சுரங்கப்பாதை செல்லும் வழியிலும் அதன் அருகில் உள்ள துறைமுகம் வரை சாலை அமைத்து தரவேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் ஸ்மார்ட் சிட்டி பிரிவு அதிகாரிகள், செயற்பொறியாளர் மாணிக்கவாசகம், துணை பொறியாளர் பன்னீர்செல்வம், பொது மேலாளர் சோமசுந்தரம், தொகுதி தி.மு.க. செயலாளர் சக்திவேல், அவைத்தலைவர் ரவி ஆதிதிராவிடர் நலத்துறை துணை அமைப்பாளர் தங்கவேல் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Next Story






